Friday 26 July 2013

ஆதலால் காதல் செய்வீர் .....பாரதி


"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் 

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் 

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

 கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் 

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! 

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; 

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், 

அதனாலே மரணம் பொய்யாம்."

Thursday 25 July 2013

கீதை..... பாவம் செய்யத் தூண்டுவது எது?

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும் என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று வரும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீறி அவனைத் தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத் தூண்டுவது எது?”

  இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின் மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும் குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?”

ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.
“அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது தான் என்பதை அறிந்து கொள். புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு அன்றாட விரோதியாக உள்ளது.

புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.”

காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.

சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச் செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும் கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.

உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது  தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன் அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின் ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.

இங்கு ’புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள் கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம் அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை. இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக் குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை மறைத்துக் கொண்டே இருக்கும்.

புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும் தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது. இடையிடையே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு அவ்வப்போது ஒரு திரையே.

அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால் உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.

கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம். இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.

காற்று வீசி புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும் தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில் கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில் தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய முடியும்.

தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன் ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச் செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும் ஆட்கொள்கிறது. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும் ஆட்கொள்கிறது. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகிறது. 

சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீள்வது? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.

”நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும் அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.

புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது. மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும் ஆன்மா மிக நுட்பமானது.

தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய விரோதியை அழித்திடுவாயாக!”

ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன. புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும், அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.

ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும் தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால் மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும் கிடைக்கும்.

எனவே ஆசைகள் புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும் அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இத்துடன் கர்மயோகம் நிறைவுறுகிறது. இனி ஞான யோகம் ஆரம்பிக்கிறது.

Wednesday 17 July 2013

கீதை காட்டும் பாதை....ஆசை/அழிவு



நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.
"புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது.  மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்."
எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உயர்வுக்கும் அழிவுக்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.
விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான். 
எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும். எனவே, கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கிறது.  
புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம் கூறுகிறார். இங்கு விழிப்பு உணர்வு தான் விளக்காக உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள் நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.
விழிப்பு உணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.
ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். "புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது." இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்.
கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். "சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன"
இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். 'ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே' என்று கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.
சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார். "மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை.
அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்".
ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம் ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.
சிலசமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்துக்கும், அழிவுக்கும் மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.
மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய  இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.
எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது.
கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள் நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.

Tuesday 16 July 2013

ஓஷோவின் 22 கட்டளைகள் ....



1.இது அப்படி ஒரு சிறிய வாழ்வு.ஆபத்துகளை தேர்ந்தெடுங்கள்,சூதாடுபவனாக இருங்கள்.நீங்கள் எதை இழக்க முடியும்?நாம் வெறுங்கையுடன் வந்தோம்,நாம் வெறுங்கையுடன் போகிறோம்.கொஞ்ச நேரம் விளையாட்டாய் இருக்க, ஒர் அழகான பாடலை பாட,அவ்வளவுதான் முடிந்துவிடும் காலம்.ஆகவே ஒவ்வொரு கணமும் மிகவும் மதிப்பு மிக்கது.

2.உலகத்தை துறந்து விடுங்கள் என்று எல்லா மதங்களும் கற்பிக்கின்றன.உலகத்தை மாற்றுங்கள் என்று நான் கற்பிக்கிறேன்.

3.உங்களது பிரச்சனை இந்த உலகமல்ல, உங்களது பிரச்சனை உங்களின் விழிப்புணர்வுயின்மையே. உங்களின் விழிப்புணர்வுயின்மையை துறந்து விடுங்கள்,உலகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்

4.உங்களது வாழ்விலுள்ள சகல நஞ்சுகளுக்கும் தியானமே நச்சு முறிவு.அதுவே உங்களது ஆதார இயல்பை வளமாக்கும் சத்துமாகும்.

5.மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த பூசாரிகள் கண்டுபிடித்த மிக பழமையான ஒரு தந்திரமே குற்றவுணர்வு. அவர்கள் குற்றவுணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மடத்தனமான நீங்கள் நிறைவேற்ற முடியாத கருத்துகளை உங்களுக்கு கொடுக்கிறார்கள்.அதனால் அதன்பின் குற்றவுணர்வு எழுகிறது.ஒரு முறை குற்றவுணர்வு எழுந்ததும், நீங்கள் பொறியில் சிக்கியவர்கள் ஆகிவிடுகிறீர்கள். குற்றவுணர்வே-மதம் என்று கூறி கொள்ளும் நிறுவனங்களின் வியாபார ரகசியமாகும்.

6.மகிழ்ச்சியடையுங்கள்,பாடுங்கள்,ஆடுங்கள். உங்களது ஆணவங்கள் உருகி மறைந்து போகுமளவு முழுமையாக ஆடுங்கள்.ஆடுபவன் அங்கு இல்லாமல் போய்விடுமளவு முழுமையாக ஆடுங்கள். வெறும் ஆடல் மட்டுமே எஞ்சியிருக்கட்டும்.அப்போது நீங்கள் எங்கிருந்தாலும் என்னை காண்பீர்கள்.

7.எல்லா சரியானவையும் ஒருவித ஆழமான ஆணவ பயணங்களே.உங்களை பற்றி மிகவும் சரியானவராகவும்,கொள்கை கோட்பாடு கொண்டவராகவும் நினைத்து கொள்வது என்பது உங்களின் ஆணவத்தை முடிந்த மட்டும் அலங்கரித்து கொள்வதல்லாமல் வேறொன்றுமில்லை.வாழ்க்கை மிக சரியாக அமைந்தது அல்ல என்பதை அடக்கமானவன் ஏற்று கொள்கிறான்.

8.நான் பாலுணர்வுக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில் பாலுணர்வுக்கு எதிரானவர்கள் எப்போதும் பாலுணர்விலேயே இருப்பார்கள். நான் பாலுணர்வுக்கு ஆதரவானவன்,ஏனெனில் அதில் நீங்கள் ஆழமாக சென்றால் விரைவிலேயே நீங்கள் அதை விட்டு வெளியே வந்து விடுவீர்கள். எவ்வளவு அதிக பிரக்ஜையோடு போகிறீர்களோ,அவ்வளவு விரைவில் நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.ஒருவன் பாலுணர்விலிருந்து முழுமையாக வெளியே வந்து விடும் நாள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்.

9.கலவி இன்பத்தில் காலம் மறைகிறது, ஆணவம் மறைகிறது, மனம் மறைகிறது. ஒரு கண நேரம் முழு உலகமும் நின்று போகிறது. இதுவேதான் ஆன்மவுணர்வு இன்பத்தில் மிகப்பெரிய அளவில் நிகழ்கிறது. கலவி கணப்பொழுதானது. ஆன்மவுணர்வு நிரந்தரமானது. ஆனாலும் கலவி ஆன்மவுணர்வின் ஒரு பொறியை உங்களுக்கு கொடுக்கிறது.

10.கடவுள் ஒரு நபர் அல்ல. நீங்கள் கடவுளை வழிபட முடியாது. நீங்கள் தெய்வ நிலையில் வாழலாம், ஆனால் நீங்கள் தெய்வத்தை வழிபட முடியாது. வழிபடுவதற்கு ஒருவரும் அங்கில்லை. உங்கள் எல்லா வழிபாடுகளும் வெறும் மடத்தனம். உங்கள் எல்லா கடவுளின் உருவங்களும் உங்களுடைய படைப்பே. அந்த வகையில் தெய்வம் கிடையாது. ஆனால் கண்டிப்பாக தெய்வீகம் உண்டு-பூக்களில், பறவைகளில், விண்மீன்களில், மக்களின் கண்களில், இதயத்தில், ஒரு பாடல் எழும்போது, கவிதை உங்களை சூழ்ந்து கொள்ளும் போது..... இவையெல்லாம் கடவுளே.

11.எல்லா ஒழுக்கங்களும் ஒழுக்கம் அல்ல. ஒரு நாட்டில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு நாட்டில் ஒழுக்கமற்றதாக இருக்கிறது. ஒரு மதத்தில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு மதத்தில் ஒழுக்கமல்ல. இன்று ஒழுக்கமாக இருக்கும் ஒன்று நேற்று ஒழுக்கமில்லை. ஒழுக்கங்கள் மாறும். ஒழுக்கங்கள் வெறும் மேம்போக்கானவை. ஆனால் பிரக்ஜை நிரந்தரமானது. அது ஒரு போதும் மாறாது. அது பரிபூரணம்-சத்தியம்.
12.தந்த்ரா, கிழக்கத்திய மிகப்பெரிய தத்துவம். அது பாலுணர்வை புனிதம் என்று அழைக்கிறது. மிகமிக முக்கியமான வாழ்வு சக்தி என்று அழைக்கிறது. ஏனெனில் எல்லா உயர் மாற்றங்களும் அந்த சக்தியின் மூலமே நிகழ போகிறது. அதை பழிக்காதீர்கள்.

13.அன்பு ஒரு மாறும் உறவு. அது நிலையானதன்று. ஆகவேதான் திருமணம் ஏற்பட்டது. திருமணம் காதலின் மரணம். ஆமாம் நீங்கள் ஒரு அழகான சமாதியை, பளிங்கு சமாதியை, ஒரு அழகான நினைவாலயத்தை எழுப்புகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன சொல்லி அழைத்தாலும் அது புதைக்குழிதான்.

14.தியானமில்லாத வாழ்வு வெறும் தீனி தின்று கொண்டு இருத்தலே. நீங்கள் வெவ்வேறுவிதமான தீனிப்பிண்டங்களாயிருக்கலாம், யாராவது முட்டைகோஸ், யாராவது காளிபிளவர்.....ஒரு காளிபிளவர் என்பது காலேஜ் படித்த முட்டைகோஸ்தான், பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

15.உண்மையான நபர்களுக்கு மட்டுமே உண்மையான நிகழ்வுகள் நிகழ முடியும். குருட்ஜிப் எப்போதும் சொல்வார்: உண்மையை தேடாதே-உண்மையாக மாறு. ஏனெனில் உண்மை உண்மையான நபர்களுக்கு மட்டுமே நிகழ்கிறது. உண்மையாய் இல்லாத நபர்களுக்கு உண்மையல்லாதவையே நிகழும்.

16.ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை. தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை. எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை. எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.

சற்றே இதை கவனியுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா முயற்சிகளும் பயனற்றவையே. நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

17.நேசம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உண்மையான உறவும் ஒரு கண்ணாடியே. அதில் இரண்டு காதலர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதன் மூலம் கடவுளை அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். இது கடவுளை சென்றடையும் ஒரு பாதையே.

18.நேசத்தில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து ஒன்றுதான், இரண்டல்ல, ஆழமான அன்பில் இருமைத்தன்மை மறைகிறது. கணக்கு கடந்து செல்லப்படுகிறது, அது அர்த்தமற்று போகிறது. ஆழமான அன்பில் இரண்டு நபர்கள் இரண்டு நபர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஒன்றாகிவிடுகின்றனர். அவர்கள் உணர்வில், செயலில், ஒரே ஒருவராக, ஒரே உயிராக, ஒரே பேரானந்தமாக செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.
19.தியானத்திற்கு சட்டங்களில்லை. அது ஒரு ஜன்னலோ, கதவோ அல்ல. தியானம் என்பது ஒருமுகப்படுத்துவது அல்ல. அது வெளி கவனிப்பு அல்ல. தியானம் என்பது விழிப்புணர்வு.

20.நீங்கள் பயந்தால், அடுத்தவருக்கு உங்களை பயமுறுத்த நீங்களே சக்தியளிப்பவர் ஆகிறீர்கள் என்பது வாழ்வின் அடிப்படையான ஒரு விதி. பயத்தை பற்றிய உங்கள் எண்ணமே போதும், அடுத்தவருக்கு உங்கள்மேல் துணிச்சலை தோற்றுவித்து விடும்.

21.ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் என்பதை போல வாழுங்கள். யாருக்கும் தெரியாது- இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.

22.புரிதல் இல்லாத நிலையே யோசனை. உங்களுக்கு புரியாததால்தான் நீங்கள் யோசிக்கிறீர்கள். புரிதல் எழும்போது யோசனை மறைந்துவிடும்.

Sunday 14 July 2013

வெற்றி நிச்சயம்...

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------

 
 உள்ளம் என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும் அன்பே வா


 கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே..

சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
  
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..

 விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம்





 

தெய்வத்தின் மொழி

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக


நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும்  உள்ளது தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதெல்லாம் இறைவனும் தந்ததில்லை

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக

Saturday 13 July 2013

GOLDEN WORDS...

 வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்...

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
 மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு

அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை

 கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
 நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு


கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

 தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா


 மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
 அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,..
  
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை



 பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

  
தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே ....


பாரதி .......சிவசக்தி



நல்லோதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..!
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசைனை தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுள்ளதோ..!

உன்னைப் பார்...osho


முழுமையாக பிழிந்து சாறெடுத்து விடு

எல்லா நட்சத்திரங்களும் மாறிக் கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் மறைந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றன. அது இங்கே பல்லாயிரம் வருடங்களாக இருந்திருக்கக் கூடும் மற்றொரு நட்சத்திரம் பிறக்கிறது. வாழ்க்கை ஒரு மாறுதல்தான், ஒரு நிகழ்வுதான், தொடர்ச்சிதான். இதில் தவறேதும் இல்லை.

வரும் இந்த கணத்தை அனுபவி. அதை உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருந்து, ஏனெனில் அது நகர்ந்து கொண்டே இருக்கும். நினைப்பதில் நேரத்தை வீணடிக்காதே. நினைக்க ஆரம்பிக்காதே. அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படாதே. நேற்றைப்பற்றி நினைக்காதே.

இது இருக்கும் போதே அதன் முழுமையான சாறெடுத்து அனைத்தையும் பருகி விடு.

2.      உன் இதயத்தில் கவிதை இருக்கிறதா

பார், கவனி, தெளிவு படுத்திப்பார். உனது வாழ்வை திரும்பிப்பார். வேறு யாரும் உனக்கு உதவ போவதில்லை. நீ மற்றவர்களை சார்ந்து வெகுகாலம் இருந்து விட்டாய். இதனால் நீ முட்டாளாகி விட்டாய். இப்போது அக்கறை கொள், இது உன்னுடைய பொறுப்பு. நீ உன் வாழ்க்கைக்கு செய்திருப்பது என்ன என்று ஒரு ஆழமான பார்வை பார்ப்பது என்ற உறுதிமொழியை உனக்கு நீயே கொடுத்துக் கொள்.

உனது இதயத்தில் ஏதாவது கவிதை இருக்கிறதா இல்லையென்றால் நேரத்தை வீணடிக்காதே. உனது இதயத்தை தாலாட்டி கவிதை எழ உதவி செய். உனது வாழ்வில் எங்காவது நேசம் இருக்கிறதா இல்லையா இல்லையென்றால் நீ இறந்துவிட்டாய் என்றே பொருள், நீ ஏற்கனவே உன் கல்லறையில் இருக்கிறாய்.

அதிலிருந்து வெளியே வா. வாழ்வில் ஏதாவது காதல் இருக்கட்டும், சாகசம் ஏதாவது இருக்கட்டும். பரிசோதனை செய்து பார், கோடிக்கணக்கான ஆச்சரியங்களும் அற்புதங்களும் உனக்காக காத்திருக்கின்றன. வாழ்வென்னும் கோவிலுக்குள் நுழையாமல் நீ வெளியேயே சுற்றி சுற்றி வருகிறாய். இதயம்தான் வாசல்.

3.      உன்னைப் பார்

நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அது பண்பாடால்ல. அது நல்லதுமல்ல. அது நாகரீகமற்றது, மனிததன்மை அற்றது. நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது. நீ எதற்கு கவலைப்பட வேண்டும் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க நீ யார்

அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை அடக்கி வைத்ததன் விளைவே, அதன் வெளிப்பாடே.

ஆகவே காலத்தை வீணடிக்காதே. உன்னைப் பார்.

மனம் இயங்கும் விதம்....படித்தது

மனம் இயங்கும் விதம்


.
தானதுவாகு மருந்து & பரஞானவெளியில் நடிக்கு மருந்து மோன வடிவா மருந்து & சீவன் முத்தருளத்தே முடிக்கு மருந்து. & வள்ளலார் ஆழ்மனது வெளிமனது & உள்மனது என இருபிரிவாக உள்ளன. அது போக என உயர்ந்த நிலை மனதாகவும் உள்ளது. மேல் மனது ஒரு எண்ணஅலை நீளத்தில் இயங்கும் & ஆழ்மனதும் வேறு ஒரு எண்ண அலைநீளத்திலும் இயங்கும். அதுபோல் சூப்பர் கான்சியஸ் மனதும் அதன் அருகில் இயங்கும் நிலையில் உள்ளது.

காலை சூரிய உதயத்திற்கு முன் ஆழ்மனது மிகவும் நிலைக்குச் சென்று சுறுசுறுப்பாகவும், அதிக விழிப்பு, தெளிவு நிலையில் இருக்கும். அமைதியான குளத்து நீரின் தன்மையை ஒட்டி இருக்கிறது.அந்த நேரம் நாம் எப்படி சிந்திக்கிறோமோ, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம், அறிவு, படிப்பு, விளையாட்டு பற்றிய சிந்தனை செயல்கள் மூளையில் பதிந்து செயல்படுகின்றன. அதற்கான இயக்கம் அன்று நடைபெறுகின்றன.

ஆராய்ச்சி செய்யும் மனது & தேர்ந்தெடுக்கும் மனது & புத்தகம், உடைகள். வாகனங்கள், வீடுகள், உணவுகளைத் தேடும் மனது & தடுமாறும் மனது. சூழலால் பாதிப்படையும் மனது & எல்லா முடிவுகளையும் தீர்மானிக்கும் மனது வெளி மனது. ஆனால் சில அனிச்சை செயல்கள் நமது உடலில் பல நேரம் இயங்க வேண்டும். அவைகள் புற மனதைத் தவிர்த்தே பல நேரங்களில் நடைபெறுகின்றன. உணவு, ஜீரணம், இரத்த ஓட்டம், மூச்சு சுவாசம், ஜீரண நீர் சுரப்புகள், நாளமில்லா சுரப்பி இயக்கங்கள் இவைகள் அனைத்தும் ஆழ்மனதினால் நம்மை அறியாமலே இயல்பாக, இனிமையாக, சுலபமாக பல நேரம் நடைபெறும். அதுவே ஆரோக்கியத்தின் உன்னத நிலை. குறிப்பாக ஆழ்மனது ஏதேனும் விஷயத்தில் ஒன்றிவிட்டால் அதை செயல்படுத்த முனையும். காரணங்கள் தேடாது. ஆராய்ச்சி செய்யாது. வாதம், விவாதம் செய்யாது.

ஆழ்மனதில் எது ஆழமாக பதிவு செய்யப்படுகிறதோ அது பல மடங்கு உத்வேகத்துடன் செயல்பட்டு பல்கிப் பெருகும்.அது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம். புறமனது உலக விஷயங்களை, அனுபவங்களை வாங்கி ஆழ்மனது மூலம் பதிவுகளைத் தருகின்றன.பல நேரம் புறமனது வழியாகவே ஆழ்மனதுக்கு செய்திகளின் பதிவு நடக்கின்றன. சில நேரம் புறமனது தவிர்த்தும் ஆழ்மனதில் சில பதிவுகள், சிந்தனைகள் பதிவு ஏற்படும். அதன் தாக்கம் அதனால் உருவாகும் உன்னத செயல்கள் வாழ்வில் பிரமிப்பை அளிக்கும். அது நிலையில் உன்னத, பூரண நிலை எய்தும்.

புறமனது :புற மனது & மேல் மனது & ஐந்து இந்திரியங்களின் துணையுடன் இயங்குகிறது. நம்மை சுற்றிய சூழல் செயல்பாடுகள். அதன் மூலம் பொது அறிவு, கல்வி, அனுபவம் மூலம் புற மனம் செயல்படுகிறது.சூழல் மாறும் சமயம் புறமனது செயல்பாடுகளை உடன் மாற்றும், உயிரைக் காப்பாற்றும் அவசர நடவடிக்கையில் நமது புற மனமும், செயலும் எப்படி இருக்கும் என தீர்மானிக்க இயலாது.

ஆழ்மனது: ஆழ்மனது உணர்ச்சிகளின் சங்கமத்தால் இயங்கும். மேலும் முக்கிமான எண்ணங்களின் பதிவு அலுவலகம், சேமிக்கும் அறை எனலாம். ஆழ்மனது நமது உடம்பில் இருந்து வெளிசென்று வரலாம். நினைத்தவுடன் வேறு இடம், உலகு, நாடு சென்று வரும். பல சமயம் டெலிபதி மூலம் காரண மனது அறியாமல் பல செய்திகள், தீர்வுகளை, உண்மை விஷயங்களை உணர்த்தும். பல நேரம் ஆழ்மனதின் செயல்பாடுகள் புரியாத புதிராக இருக்கும். பிரமிக்கத்தக்கதாக இருக்கும். ஆச்சரியப்பட வைக்கும்.

அதிகாலை நேரமும் தியான சமயத்திலும் ஆழ்மனதின் ஓட்டத்துடன் புறமனது இணைந்திடுவதால் இயங்குவதால் அளப்பரிய உன்னத பிரமிப்பு ஊட்டும். மாயாஜால சக்திகளைப் பெற்றிடுகிறோம். அனுபக்கிறோம். பிறருக்கும் வல்லமை வழங்கும் வலிமையைப் பெறுகிறோம். ஆரோக்கியம் அடைகிறோம். மன அழுத்தம் சமன் ஏற்பட அதுவே உகந்த காலம் & நமது ஆர்வ சக்தி, வாழ்க்கை சக்தி பேட்டரி முழு அளவில் அப்பொழுது சார்ஜ் செய்யப்படுகிறது. நமது புறமனது பல நேரம் ஆழ்மனதின் காவல்காரன், வாட்ச்மேன் மற்றும் பல தவறான செய்திகளைத் தவிர்க்கவும், தவறான செயல்களைத் தவிர்க்கவும் செய்கின்றன.

சில நேரம் ஆழ்மனது சில குறிப்பிட்ட ஆலோசனை படியும் புறமனதை இணைத்து இயங்கச் செய்யும். பல நேரம் ஆலோசனைக்கு செவி சாய்க்காது. ஒரு பிரச்சனையில் புறமனது பல தீர்வுகளைத் தரும் சமயம் அதன் செயலை அகமனதிடம் ஒப்படைக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஒரு தீர்வை அகமனதின் மூலம் மறுநாளோ, ஓய்வுநேரத்திலோ, அதிகாலை நேரத்திலோ, தியான நேரத்திலோ உணவு நேரத்திலோ நமக்குத் தந்திடும். பலா இதை உணர்ந்திருக்கலாம்.

நம்மில் மறைந்து இருக்கும் அற்புத சக்தியை, மாய உலகை வெளிக் கொண்டுவதில் தியானமும் இயற்கை உணவுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. சிந்தனை சக்தி, அறிவு சக்தி, செயல் சக்தி, ஞாபக சக்தி அனைத்தையும் உள்ளடக்கியது மனம்.

மனித சக்தி & இரத்தம் ஓட்டம் + காற்று ஓட்டம் + பிராண சக்தி ஓட்டம்.சரியாகக் கவனிக்கவில்லை எனில் குறையும்.இரத்த ஓட்டம் & பார்க்கலாம் & அறியலாம் & உணரலாம் & நம்மிடம் இருந்து குறைவுபடாது & தளர்வுறும். நம் உடலுக்குள்ளேயே அமைந்தது.

காற்று ஓட்டம் & அறியலாம் & உணரலாம். மூக்கருகில் விரல் வைத்துப் பார்த்தும் உணரலாம். பரவெளியில் இருந்து உள் வரும் & வெளியேறும்.பிராண ஓட்டம் & பார்க்க இயலாது. உள் மன ஆற்றலால் உணரலாம்.

காந்த சக்தி ஓட்டம் & இயங்க இயங்க சக்தி விரயமாகும். வெளியேறும் தினமும் சார்ஜ் செய்யப்பட வேண்டும்.இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், பிராண ஓட்டம், வெப்ப ஓட்டம் நமது உடலின் மின்காந்த சக்தி அளவுகளை நிர்ணயம் செய்கின்றன. உடலின் காந்த சக்தி அளவை உயர்த்தும் கலை உள்ளது.

பிரபஞ்சத்திலும் இவ்வகை சக்தி பரவியுள்ளது. மனம் எனும் கருவியை செம்மைப்படுத்தி, நல்ல விளை நிலமாக்கி பிரபஞ்ச காந்த சக்தி அபிரிதமாகப் பெற்று அற்புதப் பலன் பெறலாம்.

வெளிமனம் துள்ளிடும் மனம். அலை பாயும் மனம் & குரங்கு குட்டிக்கு சமம். தன்னிறைவு கொள்ளாது. ஐம்புலன் உதவியால் இயங்கும் & அன்றாட வேலைகள். கடமைகளை வெளிமன உதவியுடன் இயல்பாகச் செய்ய இயலுகிறது. வெளிமனம் சிறப்பாகச் செயல்படாத போது அன்றாடப் பணிகள் நிலை தடுமாறி நமது குணம் மாறுபட்டு அவப்பெயர் அடைகிறோம். மனிதனை எளிதில் தூங்கவிடாது. ஆழ்மனம் ,உள்மனம்: & அபார சக்தி கொண்டது & ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளது. அளப்பரிய ஆற்றல்கள் அடங்கிய நிலையில் உள்ளது. உறங்கும் பூதம் எனலாம்.கடல் தண்ணீர் ஒன்றுதான் & மேல் நிலையில் எவ்வளவு ஆர்ப்பாட்ட அலை & அடிப்பகுதி எவ்வளவு அமைதி நிலை & அதுபோலே உள்மனம் & ஆழ்மனம், உள்மனம் பார்க்காமல், கேட்காமல் இயங்கும்.

உள்மனம் வெளிமனக் கட்டளைப்படி மறுப்பில்லாமல் செய்து முடிக்கும். ஆனால் அவசர காலத்தில் உள்மனக்கட்டளைப் படி மனிதன் செயல்படுகிறான். அவசர காலம் முடிந்தவுடன் வெளிமனம் தனது பொறுப்பை மறுபடி ஏற்றுக் கொள்கிறது. தூங்கும்போது & வெளிமனம் ஓய்வு எடுக்கிறது. உள்மனம் நிறைய நேரம் முழு ஓய்வு எடுப்பதில்லை & அரை குறை விழிப்பு நிலையில் உள்ளது. உள் மனதினால் ஜீரணம், சுவாசம், கழிவு வெளியேற்றம் பிறந்தது முதல் இறப்பு வரை நடைபெறுகின்றன. அதனால் உள்மனதிற்கு ஓய்வு இல்லை. ஆழ்ந்த, அமைதியான, சுகமான, கவலையற்ற உறக்கத்தில் உள்மனம் குறுக்கிடுவதில்லை. அதுவும் பூரண ஓய்வெடுக்கிறது. அப்போதும் உயிர் நிலை செயல்கள், ஜீரணம், புதிய திசுக்கள் உருவாகுதல் நடைபெறுகின்றன. சுவாசம் 20 விழுக்காடு நிலையில் நடைபெறுகின்றன.

நன்றாக உறங்கியவர்கள் மறுநாள் அதீத சுறுசுறுப்பு, உந்து சக்தி, உற்சாகம், சந்தோஷம் மிகுந்து காணப்படுவர்.மனிதன் மனோ சக்தி மூலம் தேக காந்த சக்தியை பிரபஞ்சத்து சக்தி மூலம் கூட்டும் வல்லமையால் ஆரோக்கியத்தை அடைய இயலும். தேக காந்த சக்தி குறையும் சமயம் ஆரோக்கியம் குறைகிறது. இத்தேக காந்த சக்தி அபரிதமாகும் போது பிறரை வசியப்படுத்தும், குணப்படுத்தும், வல்லமை பெறலாம்.

பணம் ஓரு பிரச்சனை அல்ல...

 OSHO WORDS....

பணம் ஓரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.

உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஓரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஓரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.

எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஓரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஓரு வகையான தூய்மையை, ஓரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.

சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம், பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.

என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தெரடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கொள். பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஓரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.

வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடு, பணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.

என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஓரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையை, நடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான். இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லை” எனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!

அதனை ஆனந்தமாக அனுபவி!-----osho

ஆதி அந்தமும் அவள் தான்

தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி

அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

உலகம் பிறந்தது எனக்காக...

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

ஆழ்மன சக்திகள்.........என்.கணேசன்

ழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத்
தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது.
அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
'ஏ' பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக 'பி' பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக 'சி' பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக 'டி' பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது.
கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது 'டி' பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.
மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது.
1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.
டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.
ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் "நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon's Grotto)" என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் "உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்," என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.
ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ "பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை," என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. 'வீடியோ கேம்'களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.
சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

புதன், சனி நீராடு....

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்
கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்
பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்
பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்
தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்
தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்
நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க
நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."


- தேரையர் -

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

வெற்றி நிச்சயம் ...

                       கவனகர்........... முழக்கம் .........

திருக்குறள் இராம .கனகசுப்புரத்தினம்.......

Wednesday 10 July 2013

படித்ததில் பிடித்தது ...எத்தனை மனம் ..

மனம் எத்தனை மனமடி !

மனம்.

என் மனதில் நீ இருக்கிறாய்.உன் மனதில் நான் இருக்கிறேன்.

நீ என் மனதை காயப்படுத்தி விட்டாய்.

என் மனதிற்கு பிடித்துருக்கிறது; பிடிக்கவில்லை.

இப்படி மனதையொட்டி பல கருத்துகளை நாம் பார்க்கிறோம்.

மனம் என்றால் என்ன?

நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்களை பற்றி ஒரு கருத்து உங்களிடம் இருக்கும்.
உங்களை சுற்றி உள்ளவர்களைப் பற்றி ஒரு கருத்து உங்களிடம் இருக்கும்.
உங்கள் நம்பிக்கை; அவநம்பிக்கை, பிடித்தது; பிடிக்காதது..
படித்தது; அனுபவித்தது..
இப்படி எல்லாமே உங்களை சுற்றி ஒரு 'புகை' மண்டலத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும்.

இதுதான் மனம். மனம் நம்முள் இருக்கிறது என்ற கருத்துக்கு பதில் நாம் மனதினுள் இருக்கிறோம் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.

அதை இப்படி கற்பனை பண்ணிக் கொள்வோம்.

நாம் நடுவில் இருக்கிறோம். நம் மனம் நம்மை சுற்றி உள்ளது. இதுதான் நாம்.


இதுதான்
நம் உலகம். நாம் படித்த மற்ற உலகங்களை மறந்து விடுவோம். அவை அனுபவப் படாது.

அடுத்து இது உங்கள் நண்பர். அவருக்கும் தனி மனம் உண்டு. இதுதான் அவர் உலகம்.

நீங்கள் இருவரும் பழகும் பொது , உங்கள் இருவரின் மனமும் ஒரு பகுதியாக இணையும்.

எவ்வளவு பகுதி இணைகிறதோ, அவ்வளவு நட்பாக இருப்பீர்கள்.

எவ்வளவுதான் இணைந்தாலும், உங்களின் பெரும்பகுதி தனியாகத்தான்; தனித்தன்மையுடன் இருக்கும்.

உங்களுக்கு A பிடிக்கும். C பிடிக்கும்.
உங்கள் நண்பருக்கு B பிடிக்கும். C பிடிக்கும்.
என்று வைத்துக்கொள்வோம்.

மனதில் அது இவ்வாறு வேலை செய்யும்.


நீங்கள் ஒரு மனம். உங்கள் நண்பர் ஒரு மனம். இப்போது புதிதாக, உங்கள் இருவருக்கும் ஒரு தற்காலிக மனம். இந்த தற்காலிக மனத்திற்கு உங்கள் இருவரின் மனமும் பங்கு தருகின்றன.

நாம் பலரிடம் பேசுகிறோம்; பழகுகிறோம்; அன்பு செலுத்துகிறோம்.

அவ்வகையில் நம் மனதை சுற்றி பிறரின் மனங்கள் சிக்கி பிணைந்துள்ளன.

இருவர் இணைந்தால், புதிதாக ஒரு மனம் தோன்றி மொத்தம் அங்கு மூன்று மனமாகிறது.

மூவர் இணைந்தால், புதிதாக 7 மனங்கள் தோன்றி மொத்தம் பத்து மனமாகிறது.

நால்வர் இணைந்தால், புதிதாக 13 மனங்கள் தோன்றி மொத்தம் 17 மனமாகிறது.

இப்படியே ஒரு பெரிய கூட்டம் சேர்ந்து, எண்ணிக்கையிலடங்கா மனதை உருவாக்குகின்றன. அதன் உச்சத்தில் ஒரு சமுதாயத்தின் மனதை உருவாக்குகின்றன.

இவ்வாறே ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியே அவ்வினத்திற்க்கான மனம் செயல்படுகிறது.

பிறகு அது வளர்ந்து மொத்த மனித குலத்தின் மனமாகிறது.

அது மென்மேலும் பெருகி அதன் மிக உச்ச நிலையில் பிரபஞ்ச மனதை தோற்றுவிக்கிறது என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் ஓர் ஆசிரியர் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் மாணவர் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் புள்ளிகள் அளிக்கிறிர்கள்.
39 புள்ளிகள் எடுத்தால், இன்னுமொரு புள்ளி கொடுத்து அம்மாணவனை 'பாஸ்' ஆக்கவும் முடியும்; அந்த ஒரு புள்ளி கொடுக்காமல் அம்மாணவனை 'பெயில்' ஆக்கவும் முடியும். முடிவு உங்கள் கையில். இங்கு உங்கள் மனம் மட்டுமே முடிவெடுக்கும். அதற்கு அந்த அதிகாரம் உண்டு. அம்மாணவன் உங்களிடம் பணிந்து கேட்டுக்கொண்டால், நீங்களும் அப்புள்ளியை கொடுக்க வாய்ப்புண்டு.


அடுத்து, ஒரு கார் வாங்கப் போகிறிர்கள். உங்கள் மனம் மட்டும் முடிவெடுக்க முடியாது. உங்கள் துணையும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

உண்மையில் யார் முடிவெடுக்கிறார்கள்?

மேலே கொடுக்கப்பட்ட உதாரணத்தில் C உங்களது தற்காலிக புதிய மனம். இதுதான் முடிவெடுக்கும்.

C என்ன பண்ணும்? அது A-வான உங்கள் வருமானத்தையும், B-யான உங்கள் துணையின் வருமானத்தையும் வைத்து ஒரு கணக்கு போட்டு முடிவெடுக்கும்.

ஆனால், பார்ப்பதற்கு, C-யின் செயல்பாடு தெரியாது. நாம் சொல்வோம். நானும் என் துணையும் சேந்துதான் முடிவெடுத்தோம் என்று! இங்கு அதிகாரம் C-யின் கையில் உள்ளது.

அதே போல்தான், ஒரு நிறுவனத்தின் மனம்; ஒரு சமுதாயத்தின் மனம்; ஒரு இனத்தின் மனம் என்று வளர்ந்து பிரபஞ்ச மனம்வரை செல்கிறது.

நம் சக்திக்கு மீறிய செயல் நடைபெற வேண்டுமானால், நம் கோரிக்கையை பிரபஞ்ச மனதிடம் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.

கொடுக்க வேண்டும் என்றால், அது கொடுக்கும்; முடியாது என்றால் அது கொடுக்காது.

இந்த பிரபஞ்ச மனதின் செயல்பாடுகளை மக்கள் புரிந்துக் கொள்ளாமல், கடவுளிடம் வேண்டுங்கள். கிடைக்கும் என்றார்கள்.

ஆரோக்கியம் வேண்டுமா?
குழந்தை வேண்டுமா?
கார் வேண்டுமா?
வீடு வேண்டுமா?
நல்ல கணவன் வேண்டுமா?
நல்ல மனைவி வேண்டுமா?

இப்படி எது வேண்டுமானாலும் கடவுளிடம் வேண்டுங்கள்;
சாமியிடம் வேண்டுங்கள் என்பார்கள்.

உங்களுக்கு கிடைக்கும் என்றால் நிச்சயம் கிடைக்கும்.
கிடைக்காது என்றால் நிச்சயம் கிடைக்காது.

இப்படி நம் தேவைகளை கொடுக்கும் பணியை பிரபஞ்ச மனம் செய்கிறது என்று நான் கருதுகிறேன்.
கடவுளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

நாம் கேட்பது எதனையும் கடவுள் கொடுக்கப் போவதில்லை.
அது அவர் வேலையில்லை.

புராணங்களில் பக்தர்களின்; அடியவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அதிசயங்கள் நிகழ்ந்தனவே, அவை அனைத்தும் கடவுளின் வேலையில்லை.

மனம்தான் தன அனுபவத்துக்கேற்ப அறிவோடு அல்லது முட்டாளாக இருக்கிறது.

மொத்த அனுபவத்தின் உச்சமாக பிரபஞ்ச மனம் பேரறிவோடு இருக்கிறது.

அறிவு என்ற வார்த்தை கடவுளுக்குப் பொருத்தமில்லை.

அறிவு அனுபவத்தை கொடுக்கிறது. கடவுள் அனுபவத்தை கடந்து நிற்பது. அவ்வகையில், கடவுளுக்கு அறிவு என்பது இல்லை. நக்கலாக சொல்வேதேன்றால், கடவுள் என்பது அறிவற்ற முட்டாள்.

ஆனால் கடவுள்தான் எல்லாமே! அதனால்தான் அறிவைக் கொண்டு கடவுளை அணுக முடியாது என்று ஞானிகள் சொன்னார்களோ!

அறிவுள்ள பிரபஞ்ச மனம் (அதாவது மக்களின் கண்களுக்கு கடவுள்) பிறப்பு இறப்பிற்கு கட்டுப்பட்டது. அது நிலையில்லை.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் நிலையானவர்கள் அல்ல; அவர்களுக்கும் 'பிறப்பு', 'இறப்பு' உண்டு; சிவன் என்பது ஒருமையல்ல, அது பன்மை; ஒரு சிவன் காலம் முடிந்தவுடன் அடுத்த சிவன் வருவார்; அதே போல்தான் மற்ற மூர்த்திகளும், என்று கூறப்படுவதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

படித்ததில் பிடித்தது .....தியானதூக்கம்


தூக்கம் உன் கண்களை ...தழுவட்டுமே ..அமைதி உன் நெஞ்சில்...நிலவட்டுமே...

இந்தப் பாடல் வரிக்கும் தியானத்துக்கும் உள்ள தொடர்பை பற்றி இந்த இடுகையில் சற்று பார்ப்போம்.

வீட்டில் மின் விசிறி ஓடுகிறது.
தொலைகாட்சி சத்தம் போடுகிறது.
ரேடியோ கத்துகிறது.

இந்த சத்தங்களை தவிர்த்து, வேறு பல வகையான சத்தங்களும் வெளியிலிருந்து கேட்கிறது.

இந்த சத்தங்களில், நாம் மிகவும் முக்கியமான ஒன்றை தொலைத்து விடுகிறோம்.
ஆம். நாம், நம்மை தொலைத்து விடுகிறோம்.

நாம் சத்தமான சூழலிலேயே வாழ்கிறோம் என்பதையே கவனிக்க தவறி விடுகிறோம்.

திடீரென, மின்சாரம் 'கட்' ஆகிவிடுகிறது.

மின்விசிறி ஓடவில்லை.
தொலைகாட்சி, ரேடியோ கத்தி உயிரை வாங்கவில்லை.

எல்லா வகை சத்தமும் நின்றுவிட்ட மாதிரி ஒரு சூழல்.

நன்கு கவனியுங்கள். இவ்வளவு நாள் நாம் கவானிக்காத ஒரு சத்தம், ஒரு புது வகை சத்தம் மெல்லிதாக கேட்கும்.

அந்த சத்தம் வெளிப் பொருளிலிருந்து வரவில்லை.

மாறாக, அது 'வெளியின்' சத்தம்.

நம் காதுக்கு ஒரு இரைச்சல் போல் கேட்கும்.

அந்த இறைச்சலையே கவனித்தால், அது பெருகும். அதில் ஒரு லயம் தோன்ற ஆரம்பிக்கும்.

மிகவும் இனிமையான இரைச்சல் அது.

இப்போதைக்கு அதை இரைச்சல் என்றே குறிப்பிடுகிறேன்.

இந்த இரைச்சலை பிடித்துக் கொள்ளுங்கள்.

தியானத்துக்கு இதுதான், பாதை.

தூக்கத்துக்கு இதுதான் தூக்க மருந்து.

ஒரு தடவை இந்த இரைச்சலை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, மின் விசிறி ஓடினாலும் பரவாயில்லை. வேறு சின்ன - சின்ன சத்தங்கள் கேட்டாலும் பரவாயில்லை.

நன்கு கவனியுங்கள் இந்த இரைச்சலும் அங்கு இருக்கும்.

தெளிவாக கேட்கவில்லைஎன்றால், ஒரு பக்க காதை தலையணை மேல் மூடும்படி வையுங்கள். இரைச்சல் கேட்கும்.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால், இரண்டு காதுகளையும் மூடுங்கள்.

படுக்கையில் படுத்தபடி, அந்த இரைச்சலையே கவனியுங்கள்.

நன்கு தூங்கி விடுவீர்கள். எப்பொழுது தூக்கம் வந்தது என்றே தெரியாது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து விடும்.

சரி, இங்கு என்னத்தான் நடக்கிறது?

அந்த இரைச்சல் சத்தத்தை கேட்கும்பொழுது, கவனிக்கும்பொழுது மனத்திற்கு வேலை குறைகிறது.

வேலை குறைவதை மனம் ஏற்காது. மனத்திற்கு எந்நேரமும் வேலை செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அது செத்துவிடும்; நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.

மனம் விடாது. நாம் இரைச்சலை கவனிக்கும்போது , தியானம் செய்கிறோம்.
விழித்திருந்தால்தானே நாம் தியானம் செய்ய முடியும்!

நாம் விழிப்பை முடிவுக்கு கொண்டுவர மனம் நம்மை தூங்க விடுகிறது. நாம் தூங்கிவிட்டால், கனவில் அது ஆட்டம் போடலாமே!

எல்லாமே நாம் மனத்தின் தந்திரம்.

இப்போதைக்கு மனத்தின் இந்த இயல்பை நாம், நாம் தூக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் உண்டு.

நாம் தூங்கும்போது, இந்த இரைச்சலையே கேட்டபடி தூங்கினால், நாம் நம்மை அறியாமல் தியானம் செய்கிறோம்.

தியான நிலையிலேயே தூங்குகிறோம்.

இவ்வாறு தூங்குவதால், உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தவுடன் நாம் விழித்துக் கொள்வோம்.

இந்த வகை தூக்கத்தில் வரும் கனவுகள் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்றன. ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடலாம். அவை வெறும் கனவுகள்தான்.

ஆனால், நாம் தியானத்திற்குள் நுழைய உதவும் கனவுகள் அவை. நம்மை பற்றி நாமே அறியாத பல விசயங்கள் இப்படி ஆழ்ந்த கனவு மூலம் வெளிப்படுகின்றன.

தியானம் செய்வது பிறகு இருக்கட்டும்.

முதலில் நன்றாக தூங்குவோம்.

புற சத்தங்கள் குறைந்தபின், நம் காதில் கேட்கும் அந்த இரைச்சலையே கேட்போம்.

ஆழ்ந்து தூங்குவோம்...

நிம்மதியாக தூங்குவோம்...

தூங்குவதும் ஒரு வகை தியானமே!

படித்ததில் பிடித்தது ....சோம்பல்



புரிதலுக்கான...இயற்கையின் பரிசு...சோம்பல்.

சோம்பல் என்றால், சுறு சுறுப்பின் எதிர்மறை தன்மை என்று காலங்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சோம்பல் தன்மை என்பது ஒருவருக்கு இருக்கக் கூடாது என்று நன்னெறி கோட்பாடு வகுத்து தரப்பட்டுள்ளது.

ஆனால், அந்த சோம்பல் தன்மையை இல்லாமல் ஆக்கிவிட யாராலும் முடியவில்லை.

காலையில் எழுந்திருக்க சோம்பல்...
இது நாம் அனைவரும் நன்கு அறிந்த சோம்பல்.

இரவில் சீக்கிரம் தூங்க சோம்பல்...

இரவில் தாமதமாக தூங்குவதும் சோம்பல் வகையை சேர்ந்ததா?

ஆம். சோம்பலின் முழு தன்மையை; இயல்பை நாம் புரிந்து கொண்டால்,
இரவில் தாமதமாக தூங்குவதையும் சோம்பலின் தன்மையில்தான் சேர்க்க வேண்டியுள்ளது.

ஒரு காரியத்தை செய்யும் முன் நமக்கு சோம்பலாக இருக்கிறது என்று எண்ணிக்கொள்வோம்.

அப்பொழுது என்ன செய்வோம்?

அதிகம் சிந்திப்போம் என்பதை கவனிக்கவும்.

அந்த குறிப்பிட்ட காரியம் தொடர்பாக நேர்மறை, எதிர்மறை என்று சிந்தித்து, சிந்தித்து நேரத்தை கடத்துவோம்.

அச்சமயத்தில், பல எண்ணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு எண்ணக் கூட்டத்தை உருவாக்குகின்றன. இந்த எண்ணக் கூட்டத்தை மனம் என்றும் அழைக்கலாம்.

இந்த எண்ணக் கூட்டம் ஒரு சூழலை வடிவமைக்கிறது. அந்த சூழல் ஒரு திரை போல, ஒரு மேடை காட்சி போல் நமக்கு காட்சி தருகிறது.

நாமும் அந்த காட்சியை பிடித்துக் கொள்கிறோம். நமக்கென்று எந்த சுய ஆதாரமும் இல்லாததால், நமக்கு தென்படும் ஏதாவது ஒரு காட்சியை நாம் ஆதாரமாக பிடித்து தொங்கி கொள்கிறோம்.

நாம் ஒரு நிலையில் இருக்கும்போது, அந்நிலைக்கு ஏற்ப இந்த எண்ணத்தால் ஆன காட்சி அமைப்பு நமக்கு தென்படும்.

வேறு நிலைக்கு நாம் மாற நினைக்கும்பொழுது, அப்புதிய நிலைக்கு ஏற்ப காட்சி இன்னும் தோன்றவில்லை. முதல் நிலை காட்சியிலேயே இருந்துக்கொண்டு, வராத; இன்னும் உண்மையாகாத புதிய காட்சியை பற்றி நாம் சிந்திக்கிறோம்.

முதல் காட்சிக்கான எண்ணக் குவியல் (மனம்), இன்னும் வராத புதிய காட்சியை அலசுகிறது. பல 'லாஜிக்' காரணங்களை உருவாக்குகிறது.

இவ்வாறு, முதல் எண்ணக் குவியல் (மனம்) இன்னும் உண்மையாகாத புதிய காட்சியை பற்றி 'லாஜிக்குடன்' அலசும் இக்காலக் கட்டத்தையே நாம் 'சோம்பலாக' உணருகிறோம் என்பது என் பார்வை.

இங்கு இரு விசயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

ஒன்று, எண்ணக் குவியல் என்ற மனம்.

மற்றொன்று, காட்சி என்ற சூழல் மாற்றம்.

காலையில், படுக்கையில் படுத்திருக்கும்போது, எழுந்திருக்க நினைக்கிறோம். ஆனால் சோம்பலாக இருக்கிறது.

படுக்கையில் படுத்தபடி கவனியுங்கள். நம் இருப்பையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் ஒரு காட்சியமைப்பாக பாருங்கள்.

அந்த சமயத்தில், நம் மனம் வேலை செய்யும், லாஜிக்குடன்.

எழுந்து குளித்து, வேலைக்கு கிளம்பலாம் என்று ஒரு புதிய காட்சியை நாம் கற்பனை பண்ணுவோம். ஆனால், மனம் 'இன்னும் கொஞ்சம் படுத்திருக்கலாமே' என்று கூறும்.

புதிய காட்சியமைப்பை உண்மையாக்க மனம் யோசிக்கிறது. இப்படியே சிறிது நேரம் மனம் யோசிக்க, நாம் நடப்பு காட்சியமைப்பில் தொக்கி நிற்க, நாம் சுகமாக சோம்பலை அனுபவிக்கிறோம்.

இங்கு இரண்டு சாத்தியக் கூறுகள் உண்டு.

ஒன்று, புதிய காட்சியமைப்பை உண்மையாக்காமல் அப்படியே, எண்ணக் குவியலுடன் நடப்பு காட்சியமைப்பில் இருப்பது. இப்படி நீண்ட நேரம், நடப்பு காட்சியமைப்பில் தொக்கி நின்று, எண்ணக் குவியலுடன் இருந்தால், நாம் சோம்பலில் முழுமையாக வாழ்கிறோம் என்றாகிறது.

சோம்பலை முழுமையாக வாழ்ந்தால், திடிரென ஒரு நாள், நமக்கு சோம்பலை பற்றி தெளிவு கிடைக்கிறது.

அதன் பின், நாம் நினைத்தால், நடப்பு காட்சியமைப்பில் தொடர்ந்து இருக்கலாம். அல்லது எண்ணத்துக்கு வேலை கொடுக்காமல், நாமாகவே உடனே , விரும்பும் காட்சியமைப்பை உருவாக்கி மாற்றத்தை கொண்டு வரலாம்.

சோம்பலை புரிந்துக் கொண்டவுடன், சோம்பலுக்கு நாம்தான் எஜமான். நாம் விருப்பட்டால், சோம்பலை அனுபவிக்கலாம். இல்லையென்றால், அதை நகர்த்தி வைக்கலாம்.

இரண்டாவது சாத்தியக்கூறு.

நடப்பு காட்சியமைப்பில் இருக்கும்பொழுது, எண்ணத்துக்கு வேலை கொடுக்காமல், உடனே, காட்சியமைப்பை மாற்றுவது. இதை 'ஒழுக்கம்' (டிசிப்ளின்) என்று வரையறுக்கிறோம்.

இதில் விந்தை என்னவென்றால், 'டிசிப்ளின்' உடன் இருப்பவர்கள், ஒரு நெறிப் படுத்தப்பட்ட வாழ்வு வாழ்கிறார்கள். அது நன்றுதான்.

ஆனால், சோம்பலை புரிந்துக் கொள்ளாமல், அது ஒதுக்கப் படவேண்டியது என்று கருதி அதை ஒதுக்கி விடுகிறார்கள். உலக மக்கள் அனைவரையும் ஆட்டி படைக்கும் சோம்பலை புரிந்துக் கொள்ளாமல், அப்படியே 'ஒழுக்கமற்றது' என்று ஒதுக்குவது 'சுய தேடலுக்கு' தடையாகும் போல் தெரிகிறது.

அதனால், சோம்பல் படுங்கள். அது நல்லதே! அது இயல்பானதே!

ஆனால், வெறும் சோம்பல் மட்டும் படாதீர்கள். சோம்பலை கவனியுங்கள். சோம்பலை அனுபவியுங்கள். சுய தேடலுக்கு அதன் பங்காக ஒரு சில ரகசியங்களை அது வைத்திருக்கிறது.

oரூ காட்சியமைப்பில் நின்று கொண்டு மற்றொரு காட்சியமைப்பிற்கு மாற, சிறிது கால அவகாசம் எடுத்து யோசிப்பதே சோம்பல் என்று பார்த்தோம்.

அவ்வகையில், காலையில் எழுந்திருப்பது, சோம்பலாக இருக்கிறது என்று கூறினால், சுலபமாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

இரவில், நாம் தூங்க காலம் தாழ்த்தினாலும் அதுவும், காட்சியமைப்பை மாற்ற நாம் யோசிக்கிறோம் என்றாகிறது. அதனால், தூங்கவும் நாம் சோம்பேறித்தனத்துடன் இருக்கிறோம்.

இன்று எது செய்தாலும், சுலபமான வழி, குறுக்கு வழி தேடுகிறோம். சுலபமான வழி; குறுக்கு வழி என்பது சோம்பலின் அப்பட்டமான வெளிப்பாடு.

பேனாவால் எழுதுகிறோம். மை தீர்ந்து விடுகிறது. மாற்றுப் பேனாவை, நாம் பென்சில் பையில் வைத்திருக்கிறோம். ஆனால், பென்சில் பை இருக்குமிடம் போய் மாற்றுப் பேனாவை எடுக்காமல், நாம், நம் பக்கத்தில் உள்ளவரின் பேனாவை பயன்படுத்திக் கொள்கிறோம். காட்சியமைப்பை மாற்ற விரும்பாமல், நடப்பு காட்சியமைப்பில் தொக்கி நிற்க விரும்பும் இத்தகைய செயல்கள் சோம்பலின் வெளிப்பாடாகவே எனக்கு தெரிகிறது.

அதற்கு நாம்," அவசர நேரத்தில் பிறரின் பேனாவை நாம் பயன்படுத்துவதில் தவறு இல்லையே" என்று 'லாஜிக்' காரணங்களை கூறிக் கொள்கிறோம்.

இந்த பார்வையில் பார்த்தால், நம் வாழ்வின் பெரும் பகுதியை சோம்பலுடன் தான் கழிக்கிறோம்.

அதனால், நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட சோம்பலை ஒதுக்காமல், அதில் வாழ்வோம். அதை அனுபவிப்போம். தெளிவு பெறுவோம்.

அதனால்தான் கூறுகிறேன்.

சோம்பல் என்பது...
இயற்கை நமக்கு அளித்த...
பரிசு.

புத்துணர்வு.....osho

புத்துணர்வு
உனது மனம் புத்துணர்வுடன் இருக்கும்போது இந்த முழு பிரபஞ்சமும் ஒரு மெல்லிசையாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால் எல்லாமும் புதுமையாக இருக்கும். இந்த இயற்கையே புத்துணர்வாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால், நினைவுகள் சுமையாக இல்லாமல் இருக்கும்போது எல்லாமும் இளமையாக புதிதாக வேறுபட்டதாக இருக்கும்.
 
நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.
 
சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.
 
சாட்சிபாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்கமுடியும்.
 
பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாக தூய்மையாக இருத்தலாகும்.
 
கடந்தகாலத்தை பொறுத்தவரை இறந்துவிடு. அப்போதுதான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்கமுடியும்.
 
ஒருவர் இந்த கணத்தை முழுமையாக வாழும்போது ஒரு புத்துணர்வு பிறக்கும்.

வாலை ...வாலை...

"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "

- கொங்கணவர் -
 
"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"

 

Tuesday 2 July 2013

நெஞ்சறி விளக்கம்



கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?
கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?
எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?
தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!