Monday 21 December 2015

வலது மூளை இயக்க...

புதுமைகள் படைத்திடு! புவனம் வென்றிடு!

மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hem isphere)  இருப்பதை விஞ்ஞான பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்க மூளை இடது பக்க மூளை.
இடது பக்க மூளை ஜம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும் போது ஐம்புலன் வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும் போதும் தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Mind. Ratinal Mind. Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.
இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.
ஆனால் இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணனியின் நினைவுத்தகடு போல செயல்படுகிறது.
நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது. சுயமாக சிந்தியப்பது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது.
இதனை ஆழ்மனம் Sub Concious Mind, Subjective Mind, Sleeping Mind, Involuntary Mind, Female Mind  என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.
இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்குபோல இந்திய இதிகாச புராணங்களில் செயல்படுகிற காமதேனுவாக கற்பகத்தருவாக செயல்படுகிறது.
இந்த Sub Concious Mind  என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன். இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிறபோதுதான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.
சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை அல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலாளர்களும் அறிந்து கூறுகிறார்கள்.
அல்பா நிலையில் மன இயக்கம் 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும்(Cycles/Sec)
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும் தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும் டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கு கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
அல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கம் அற்ற தூங்காமல் தூங்கும் தியான மோன நிலை (A Hypnotic State)

டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Concious Mind )உறக்க நிலையிலும் இருக்கிறது.
உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய நினைவு மனத்தின் (Concious Mind )  செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும். நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும்.
கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்குமில்லாமல் தளர்வாக வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப்போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால் உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்டை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.
நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும் போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை.
எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்க்ள. குறிப்பாக அட்டாங்க யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.
தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள். அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள்) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.
ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணைகொண்டு எந்தப் பொருள் குறித்து புதிய செய்திகள், உத்திகள் தேவையோ, புதிய கண்டுபிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.
இந்த அல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை காட்சிகளாக காண வேண்டும்.
மனித உடல் அழியக்கூடியது ஆன்மா அழிவில்லாதது என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audo & Video)  நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்ற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.
பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெற முடியும். என்று பெஞ்சமின் பிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.
ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.
பெஞ்சமின் பிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கல்லை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துத் தளர்வாக ஓய்வாகக் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளர்ந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற அல்பா தியான நிலை.
இந்த நிலையில் தன்னுடைய பிரச்சினைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள் விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதவிலிருந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.
கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கிற ஒருமுறை, நேரடி சிந்தனை (Straight Thinking)  கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை, ஆண்டாண்டு காலமாக கிருஷ்ண பகவானுக்கும் நண்பர் குசேலருக்கும் உள்ள நட்பைப் பற்றிய இதிகாச கதைகளைக் கேட்டு நட்பின் மகத்துவத்தை பாராட்டிய நாம் 28 குழந்தைகளைப் பெற்ற குசேலர் வறுமையில் வாடியதாகவும் உதவிக்கு கிருஷ்ணரை நாடியதாகவும் கதை கேட்டு சிந்திக்காமல் விட்டுவிட்ட நிலையில் ஒரு மாணவன், இருபத்தொட்டு குழந்தைகளில் முதல் எட்டு குழந்தைகள் இருபது வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பெற்றோர்களோடு சேர்ந்து ஏறத்தாழ பத்துப்பேர் உழைக்கும் வயதிலிருந்தும் உதவிபெற வேண்டிய குடும்பமாக இருந்தது. என்றால் குடும்பத்தில் பிழை என்று குற்றம் சாட்டுகிற சிந்தனை பக்கவாட்டு சிந்தனை மாற்றி யோசிக்கும் புத்தி.
இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking  இல்லையொன்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை.
புதியன படைக்கிறவர்கள். சாதனையாளர்கள், திறமைசாலிகள், வணங்கத்தக்கவர்கள்.
மாற்றி யோசித்தால் மாநிலமே பாராட்டும்.
புதியன படைக்கப்படுகின்ற போது மகிழ்ச்சியும், ஆனந்தமும் பிறக்கின்றது. மனித மனங்கள் படைப்பாளிகளால் கவரப்படுகிறது.
புதியன பயன்பாட்டிற்கு எளிமையாகவும், மனத்தளர்வு நீக்குவதாகவும், சலிப்பு போக்குவதாகவும் அமைகிறது.
கற்பனை செய்ய முடியாதவை நிஜத்தை அடைவதில்லை. கற்பனைக் கோட்டைகளே நிஜக் கோட்டைகளுக்கு அடிப்படை வெற்றிக்குத் தேவை கற்பனைத் திறன்.
கற்பனை காலத்தை வெல்லும் செல்வத்தைச் சேர்க்கும்.

Saturday 28 November 2015

இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா? நிஜத்தை தோலுரிக்கும் முஸ்லிம் பெண்ணின் நெகிழ்ச்சி மடல்

பெங்களூர்: இந்தியாவை போன்ற சுதந்திரம் வேறு எந்த ஒரு நாட்டிலுமே இல்லை.. 'எனது இந்தியாவை' சகிப்புத்தன்மையற்ற நாடு என்று கூறும் சுதந்திரத்தை அமீர்கானுக்கு கொடுத்தது யார்? தயவு செய்து இந்துக்களின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் சோதிக்காதீர்கள் என்று இஸ்லாமிய பெண் டாக்டர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து, இந்தியாவின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு காட்டுவதாக உள்ளது., இணைய உலகில் இன்றைய பரபரப்பு கருத்தாக அந்த பெண்மணியின் கருத்து மாறிப்போயுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என 12 மத பண்டிகைகள் இணக்கமாக கொண்டாடப்படும் நாடு இந்தியா. தீபாவளி பலகாரம், அப்துல்லா வீட்டிலும், ரம்ஜான் பிரியாணி, ராமராஜன் வீட்டிலும் சாப்பிடப்படும் நாடு இந்தியா. ஆனால், ஒரு சிலரின் கருத்துக்கள் இன்றைய ஊடக வெளிச்சத்தில், தேசத்தின் முகம்போல மாற்றப்படுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் பிரபலங்களும் கருத்தை கூறும்போது, எரியும் நெருப்புக்கு நெய் வார்க்கப்படுகிறது. பெங்களூரில் வசிக்கும், சோஃபியா ரங்கவாலா என்ற அந்த இஸ்லாமிய பெண் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதன் தமிழாக்கம் இதோ: நான் ஒரு முஸ்லிம் பெண். டெர்மடாலஜி படித்த நான் பெங்களூரில் ஸ்கின் கிளீனிக் நடத்தி வருகிறேன். 18 வயது வரை நான் குவைத்தில்தான் வளர்ந்தேன். மெடிக்கல் கல்விக்காகவே இந்தியா வந்தேன். இதன்பிறகு நான் குவைத் திரும்பவில்லை, இந்தியாவிலேயே 20 வருடங்களாக வாழ்கிறேன். கர்நாடகாவிலுள்ள மணிப்பால் நகரில்தான் நான் மருத்துவ கல்வி பயின்றேன். கல்லூரியில் எனது பேராசிரியர்கள் அனைவருமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள். நான் பழக நேரிட்ட பெரும்பாலான மக்கள் இந்துக்கள். ஆனால், எனது மதத்தை வைத்தோ, எனது பாலினத்தை வைத்தோ, வித்தியாசமாக என்னை நடத்திய ஒரு சம்பவம் கூட நடந்ததே கிடையாது. நான் பழகிய ஒவ்வொரு இந்துக்களும், மிகவும், பாசமாக நடந்துகொண்டனர். சொல்லப்போனால், நான் என்னை வித்தியாசமாக உணர்ந்துவிட கூடாது, தங்களில் ஒருவளாக நினைக்க வேண்டும் என்பதற்காக எனக்கு மட்டுமே சிறப்பு கவனம் செலுத்தி பாசம் காட்டினர். அவர்கள் அனைவருக்குமே நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். மணிப்பாலில் கல்வி முடித்த பிறகு, பெங்களூரில் எனது கணவரோடு செட்டில் ஆனேன். முஸ்லிமான எனது கணவரது பெயர் இக்பால் என தொடங்கும். எனவே எளிதில் அவர் முஸ்லிம் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். சென்னை ஐஐடியில் எம்டெக் படித்த கணவர், பிறகு ஜெர்மனியில் பிஹெச்டி முடித்தார். அவரது தொழில் நிமித்தமாக இந்தியாவின் மிகமுக்கியமான பாதுகாப்பு துறை சார்ந்த பாதுகாப்பு மற்றும் ஆய்வு அமைப்பு (டிஆர்டிஓ), என்.ஏ.எல்., ஹெச்.ஏ.எல், ஜிடிஆர்இ, இஸ்ரோ, ஐஐஎஸ்சி, பெல் போன்ற நிறுவனங்களுக்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் எந்த ஒரு பாதுகாப்பு அமைப்புக்குள் போகும்போதும், இவருக்கு தனிப்பட்ட சோதனைகள் கிடையாது. ஒருமுறைகூட இவரை தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியதில்லை. சக இந்து ஊழியர்களுக்கு என்ன சோதனையோ அதுவேதான் எனது கணவர் இக்பாலுக்கும். மோடி அரசு பதவிக்கு வந்தபிறகும், இக்பால் அதே சுதந்திரத்தை அனுபவித்துதான் வருகிறார். மோடி அரசு வந்த பிறகு அரசு துறைகளில் பணி இன்னும் சிறப்பாக நடைபெறுவதாகத்தான் இக்பால் என்னிடம் கூறியுள்ளாரே தவிர, வேறுபாடு உயர்ந்ததாக கூறவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்ல வேண்டி வரும்போதும், இக்பால் ஆடை அவிழ்த்து சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். ஜெர்மனியில் பிஹெச்டி படித்தபோது, அவர் ரகசியமாக உளவு பார்க்கப்பட்டு வந்தார். குறிப்பிட்ட நாட்கள் உளவு பார்த்த ஜெர்மன், எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இனிமேல் உங்களை உளவு பார்க்க மாட்டோம். பாதுகாப்பு சோதனைகளை தாண்டிவிட்டீர்கள் என்று கூறியிருந்தது. எனது கணவர் தனது பணியிடத்தில் எல்லோராலும் அன்புடன் பார்க்கப்படுகிறார். அதில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான். சமீப காலத்தில் கூட இந்த பாசத்தில் எந்த மாற்றத்தையும் அவர் பார்க்கவில்லை. சகிப்புத்தன்மை இல்லை என்பது வெறும் வார்த்தையே தவிர, யதார்த்தம் அது கிடையாது. எனது கிளீனிக்கிற்கு வரும் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். எனது அனைத்து ஊழியர்களும் இந்துக்களே. நான் வங்கி தொழில் செய்வோர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களோடு தினமும் பழகும் வாய்ப்பை பெற்றுள்ளேன். கடந்த 20 வருடங்களில் ஒருமுறை கூட நான் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. எனது குடும்பம் முழுக்க வெளிநாட்டில்தான் உள்ளது. நானும் அங்கு செல்வது எளிதானது. குவைத்தில் கிளீனிக் திறக்க எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. அங்கு வருமானமும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் நான் இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன். குவைத்தில் நாங்கள் யாரோ ஒருவர் போலத்தான் பார்க்கப்படுகிறோம். 40 வருடங்களாக எனது பெற்றோர் உள்ளிட்ட குடும்பம் குவைத்தில் இருந்தபோதிலும், எந்த ஒரு உரிமையும் எங்கள் குடும்பத்திற்கு கிடையாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் குடியிருப்பு அனுமதியை கூட புதுப்பித்துக் கொள்ளும் நிலைதான் அங்கு உள்ளது. சட்டம் அங்கு தொடர்ந்து மாற்றப்பட்டுக் கொண்டே உள்ளது. வாழ்க்கை நடத்துவது கொஞ்சம் கடினமான காரியமாகவே உள்ளது. சட்டம், விதிமுறையை கடுமையாக பின்பற்றியே ஆக வேண்டும். அதை ஏற்கிறேன். ஆனால், வெளிப்படையாகவே, ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைதான் தாங்க முடியவில்லை. ஆசியாவை சேர்ந்தவர்களை மூன்றாம்தர குடிமக்கள் போலவே பார்க்கிறார்கள். அரபுக்களையும், வெள்ளை இனத்தவர்களையுமே அவர்கள் முதல்தர குடிமக்களாக நடத்துகிறார்கள். நாங்கள் அங்கு மகிழ்ச்சியில்லாமல் உள்ளோம் என்று கூறமாட்டேன். ஆனால் அந்த நாடு எங்களுடையது என்ற எண்ணம் வரவில்லை. நாங்கள் முஸ்லிம்களாக முஸ்லிம் நாட்டிலேயே இருந்தபோதிலும், எங்களை இந்தியர்கள் என்றுதான் குவைத் கருதுகிறது. அமெரிக்காவில் இருந்தால், அமெரிக்க இந்தியர் என அழைக்கப்படுகிறார், கனடாவில் வசித்தால், கனடிய இந்தியர் என அழைக்கப்படுகிறார், இங்கிலாந்து எனில், பிரிட்டீஷ் இந்தியன் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆனால், இந்தியாவில் மட்டுமே நீங்கள் இந்தியர்கள். இந்த இந்திய நாட்டில்தான், இது நமக்கான நாடு என்ற எண்ணம் எனக்குள் எழுகிறது. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கும், அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கூறும் உண்மையை மறுக்க முடியாது. உங்கள் வீட்டில் மட்டுமே நீங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். நான் பல பகுதிகளில் வசித்துள்ளேன். ஆனால், இந்தியாவில், யாருமே என்னை பார்த்து, 'நீங்கள் இந்தியரா?' என்ற கேள்வியை கேட்டதில்லை. இதுதான் பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு சாமானிய குடிமக்களான எனது கணவரும், நானுமே எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால், திரையுலகின் ஸ்டார்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? ஏன் அமீர்கானும், அவரது மனைவி கிரண் ராவும், பயப்பட வேண்டும்? அவர்கள் பிரபலமானவர்கள். செல்வசெழிப்பான ஏரியாவில் வசித்து வருகிறார்கள், அவர்கள் குழந்தைகள், பெஸ்ட் பள்ளிகளில் படிக்கிறார்கள், எப்போதுமே, பாதுகாவலர்கள் அவர்களை சூழ்ந்து நிற்கிறார்கள். தனியாக எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்லும் நானே பயப்படவில்லையே. இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? ஒரு பொறுப்புள்ள குடிமகளாக நான், அமீர்கானையும், ஷாருக்கானையும் கேட்க விரும்புவது, "ஏன் உங்கள் பொறுப்பற்ற வார்த்தைகளால், இந்தியாவிலுள்ள 13 கோடி முஸ்லிம்களின் மதிப்பை கெடுக்கிறீர்கள்? உங்கள் சொந்த யூகத்தை வைத்துக்கொண்டு, பொது இடத்தில் இதை கூற உங்களை எது தூண்டியது? பாகிஸ்தான் எப்படி அவர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு கூறலாம்?". எனது இந்து நண்பர்கள் இப்போது, முஸ்லிம்கள் குறித்து கூறும் கருத்துக்களால் நான் வேதனையடைந்துள்ளேன். இந்துக்கள் தங்களது பொறுமையின் எல்லைக்கே தள்ளப்பட்டுவிடுவார்களோ என்று நான் அச்சப்படுகிறேன். இத்தனை நாட்களாக நான் அனுபவித்து வந்த சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை இந்துக்கள் இனி தூக்கி எறிந்துவிடுவார்களோ என்று அச்சப்படுகிறேன். சில முட்டாள் கூட்டத்தின் காரணமாக, எனது சொந்த மக்களே, என்னை வெறுத்துவிடுவார்களோ, என்னை தனிமைப்படுத்திவிடுவார்களோ என பயப்படுகிறேன். இந்த முட்டாள்த்தனத்தை, பெரும்பான்மையான இந்துக்கள் இன்னும் எத்தனை காலம்தான் தாங்கிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? இந்தியாவில் நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்தையும், சகிப்புத்தன்மையையும், முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது. அப்படி புரிந்துகொள்ளாவிட்டால், எனது சக இந்து குடிமக்களே, நீங்கள் உங்கள் பொறுமையை விட்டுவிடாதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். இப்படி முடிகிறது அந்த பெண்ணின் கருத்து

Sunday 13 September 2015

மனதை மாற்றுங்கள் - ஓஷோ

                                 மனதை மாற்றுங்கள்

மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்றவேண்டுமென்று கருதினால், சுவாசம்தான் சிறந்தவழி. மனதின் எல்லாபழக்கங்களுமே சுவாசத்தின்பாணியை பொறுத்தே இருக்கிறது.
 சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது. முயன்று பாருங்கள்!
எப்போதேல்லாம் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறதோ, நீங்கள் பழைய பழக்கத்திற்கே போகிறீர்கள்,
உடனே மூச்சை வெளியே விடுங்கள் – ஏதோ அந்த முடிவை அந்த வெளியேவிடும் மூச்சுவழியாக தூக்கிஎறிவது மாதிரி.  வயிற்றை உள்ளே இழுத்து வெளியே மூச்சைவிடுங்கள், நீங்கள் அந்த காற்றை வெளியே எறியும்போது, அந்த முடிவை தூக்கி எறிவதைப் போல உணருங்கள், அல்லது நினையுங்கள்.
பிறகு புதிய காற்றை ஒன்றிரண்டுமுறை ஆழமாக உள்ளே இழுங்கள்.
என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமையான புத்துணர்ச்சியை
உணர்வீர்கள். பழைய பழக்கங்கள் வந்து ஆக்ரமிக்க முடியாது.
அதனால் மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள், உள்ளே இழுத்தல்ல. எதையாவது உள்ளே எடுக்க வேண்டுமென்றால், மூச்சை உள்ளே
இழுக்கத் துவங்குங்கள். எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால்,
மூச்சை வெளியே விடத்துவங்குங்கள். மனம் உடனே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள்.  உடனே உங்கள் மனது வேறு எங்கோ நகர்ந்துவிட்டதை காண்பீர்கள்; ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது.  நீங்கள் அந்த பழையபள்ளத்தில் இல்லை, அதனால் அந்த பழையபழக்கத்தை மறுபடியும் கொண்டுவரமாட்டீர்கள்.
இது எல்லா பழக்கத்திலும் உண்மை.
உதாரணமாக, நீங்கள் புகைபிடிக்கிறீர்கள்., புகைக்கவேண்டுமென்கிற உந்துதல் வரும்போது,
உடனே அதைச் செய்யவேண்டாம், அப்போது மூச்சை வெளியேவிடுங்கள், அந்த உந்துதலை தூக்கி வெளியேஎறியுங்கள். புதியகாற்றை உள்ளே இழுங்கள்,
உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள்.
உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்.

Tuesday 23 June 2015

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

வாத - உடல் உருவம் 

வாத, உடல் வகையை சேர்ந்தவர்களுக்கு, உடல் எடை அதிகரிப்பது கடினமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களது வளர்சிதை மாற்றமானது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்யும். ஆனால், அவர்களுக்கு எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்கும். இவர்களது சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். இவர்களது நாடி வேகமாக இருக்கும்.
இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சோர்வடையாமல் வேலை செய்வார்கள். இவர்களது தூக்கம், உறக்கம் [போன்றவை எல்லாம் சரியான நெறியில் இருக்காது. நேரம் தவறி செய்வார்கள். இவர்களது உடலுறவு தன்மை அதீத வகையில் இருக்கும்.
இவர்களது மனநிலை மிக வேகமாக மாறும். வெற்றி, தோல்வி என எந்த நிலையிலும் இவர்களது மனநிலை அதே இடத்தில தேங்கி நின்றுவிடாது. இவர்கள் எந்த விஷயத்தையும் மிக எளிதாக, விரைவாக கற்றுக்கொள்வார்கள்.
இவர்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கும். தன்னம்பிக்கை குறைவு. பொறுமை இருக்காது, நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவர்கள். மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிக வேகமாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதிகமாக பேசுவார்கள், கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

பித்த - உடல் உருவம்

உடல் எப்போதும் சூடாக உணரும் பண்புடையவர்கள். உடல் எடை அளவில் சரியாக இருப்பவர்கள். இவர்களுக்கு தலைமுடி நரைத்தலும், சொட்டை விழுகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு செரிமானம் இலகுவாக நடக்கும். சருமம் மென்மையாகவும், சதை போட்டும், மச்சங்கள் அதிகமாகவும் இருக்கும்.
உணவு மற்றும் உடலுறவில் மிகவும் வலிமையாக இருப்பார்கள். சுமாராக தான் தூங்குவார்கள். இவர்களை தொந்தரவு செய்வது கடினம். நாடி வலிமையாக இருக்கும்.வெயில் இவர்களுக்கு பிடிக்காது.
புத்திசாலியாக இருப்பார்கள், கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள், லட்சிய வெறி இருக்கும், வாழ்க்கையை விரும்பி வாழ்வார்கள், எதையும் கட்சிதமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எளிதாக எரிச்சல் அடைவார்கள்.
காதலை வெளிபடுத்த தயங்குவார்கள். பணத்தை பத்திரமாக செலவு செய்வார்கள். தலைமை குணம் இருக்கும். போராடும் குணம் உள்ளவர்கள்.
மிகவும் சத்தமாக பேசும் வழக்கு கொண்டிருப்பார்கள்.


கபம் - உடல் உருவம் 

உருவத்தில் பெரிதாக இருப்பார்கள், அகண்ட தோள் மற்றும் இடை , அடர்த்தியான் கூந்தல் மற்றும் உடல் உறுதி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடல் எடை அதிகமாகவும், பற்கள் மிக வலிமையாகவும், நாடி சரியான அளவில் இருக்கும்.
பசியின்மை குறைவாக இருக்கும், செரிமானமும் மிக மெதுவாக தான் செயல்படும். ருசியாகவும், வகை வகையான உணவுகளும் சாப்பிட விரும்புவார்கள். உடல் உழைப்பு மிகவம் குறைவாக தான் செய்வார்கள். நிறைய நேரம் தூங்கும் பண்புடையவர்கள். ஆயினும் நிறைய ஊக்குவிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
மெதுவாக கற்றுக்கொள்ளும் திறன் உடைய இவர்கள், அனைத்தையும் நினைவில் கொள்வார்கள். உணர்ச்சிகளை சமநிலையில் பாதிகப்பதில் வல்லவர்கள்
தங்களது சுற்றுவட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த நபராக இருப்பார்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள். உணர்ச்சிவசப்படுவதில் மெல்ல மெல்ல ஆரம்பித்து உச்சம் அடையும் பண்புடையவர்கள். குழந்தைத்தனமான, விரும்பும் வகையில் இருப்பார்கள். கூட்டமாக இருக்க விரும்புவர்கள்.
பொறுமையாகவும், அமைதியாகவும் பேசும் மனோபாவம் கொண்டவர்கள்


Wednesday 3 June 2015

தம்மபதம்

  பிறர் மீது பொறுப்பு சுமத்தாதே. அதுதான் உன்னைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது. பொறுப்பை ஏற்றுக் கொள். "நானே என் வாழ்வுக்குப் பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பல்ல. எனவே எனக்குத் துயரம் என்றால் எனக்குள்ளேயே காரணத்தைத் தேடவேண்டும். என்னவோ தவறாக இருக்கிறது. எனவேதான் என்னைச் சுற்றிலும் துயரம் நிலவ விட்டிருக்கிறேன்." என்று சதா நினைத்துக் கொண்டிரு. 

          பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக் கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அபபோதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது. ஓஷோ. 

         ஆழ்ந்த தியானத்தில் மரணத்துக்குப் பழகிப் போகும்போது பயம் மறைந்து போய்விடுகிறது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, "நான் இந்த உடல் அல்ல. நான் இந்த மனம் அல்ல. பிறகு எனக்கேது மரணம்?" என்பது தெரிந்துவிடுகிறது. இந்த உடல் மண்ணோடு மண்ணாகிப் போகும் ஆனால் பிரக்ஞை என்றும் இருக்கும். அப்போது பயம் மறைந்து போய்விடுகிறது. பயம் மறைந்து விடும்போது பிறருடைய பயத்தை நீக்க வேண்டும் என்ற மகத்தான ஆசை வந்துவிடுகிறது. பயத்தில் வாழ்கிறவர்கள் துயரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பயம் சூழ்ந்த பயங்கரமாக இருக்கிறது. ஓஷோ.

        பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக்கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக்கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அப்போதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது. 

        கவனிப்பது என்றால் சுதாரித்து இருப்பது. கவனமாக இருப்பது. ஊக்கமாக நின்றிருப்பது மனதைக் கொண்டு எதையும் விகாரப்படுத்தாமல் வருவதை அப்படியே பெற்றுக் கொள்வது. உள்ளே எந்த இரைச்சலும் இல்லாமல் மெளனித்திருப்பது. தூங்கிக் கொண்டிருப்பதல்ல. முழுக்க விழித்திருப்பது. உன் வீடு தீப்பிடித்துக்கொண்டால் எப்படி நடந்து கொள்வாய்? தூங்குவதற்கான நேரமா அது? வீடு தீப்பற்றி எரியும்போது தூங்க முடியாது. முடியும் என்கிறாயா? வீடு தீப்பற்றி எரியும்போது தூக்கக் கலக்கத்தில் இருக்க முடியாது. வெகு சுதாரிப்போடு இருப்பாய். 

       உண்மையான சந்நியாசம் என்ன என்கிறாயா? நன்றாக சிரி. ஆனால் நீ வேறு, உன் சிரிப்பு வேறு என்பதைத் தெரிந்திரு. அழு. நன்றாக அழு. கண்ணீர் பெருகட்டும். அழுகையிலும் ஒரு முழுமை இருக்கட்டும். ஆனால் சுதாரித்திரு. உனக்குள் ஒரு சுடர் அனைத்தையும் கவனித்துக் கொண்டருக்கட்டும். 

      ஆனந்தம் உன் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. அப்படியேதான் துயரமும். ஆனந்தம் காலை நேரத்துப் பனித்துளியின் புத்துணர்ச்சியைத் தருகிறது. ஆனந்தம் உன் இளமையைத் தருகிறது. ஆனந்தம் உன் நெஞ்சை நடனமாட வைக்கிறது. சோகமும் பல பரிசுகளைத் தருகிறது. ஆனால் நீயோ சோகத்திலிருந்து தப்பித்துக்கோள்கிறாய். எனவே அதன் பரிசுகள் என்ன என்பது உனக்கு தெரிவதில்லை. சோகம் தரும் மெளனம் எந்த ஆனந்தமும் தர முடியாது. ஆனந்தம் சற்றே இரைச்சலிடுவது. சோகமோ ஆழ்ந்த மெளனத்தோடு கூடியது. ஆனந்தம் சற்றே மேடிட்டிருப்பது. சோகமோ வெகு ஆழமானது. அதில் ஆழம் இருக்கிறது. ஆனந்தம் உன்னை மறக்கடிக்க வைப்பது. ஆனந்தத்தில் முழுகிப் போவது மிகச் சுலபம். ஆனந்தப் போதையில் திளைப்பது சுலபம். ஆனந்தம் உன்னைப் பிரக்ஞை தப்பிப் போக வைக்கிறது. சோகம் உன்னை விழித்திருக்க வைக்கிறது. ஏனென்றால் அதில் நீ மூழ்கிவிட முடியாது. அதில் பங்கெடுத்துக்கொள்ளலாம். புறத்தே நின்று பார்க்க முடிகிறது. ஆனால் நீதான் அதை வேண்டாம் என்கிறாயே! 
        சாட்சியாக இருப்பதன் முதல் பாடங்களைச் சோகம் எனும் வகுப்பறைகளில் கற்றுக் கொள்கிறாய். சோகத்தில் இருக்கும்போதுதான் சாட்சியாக இருக்க முடிகிறது. போகப் போக இதே சாட்சி பாவனை ஆனந்தத்திலும் சாத்தியமாகிறது. என்னவானாலும் சரியே. சாட்சியாக இருப்பதன் மூலமே கடந்து போக முடியும். எதையும் விஞ்சி நிற்க முடியும். 

        கடவுள் ஓர் ஆளல்ல. அவர் தான் என்ற உணர்வல்ல. கடவுளைச் சந்திக்க வேண்டும் என்றால் ஓரளவுக்கு அவரைப் போலாகிப் போக வேண்டும். தான் இல்லாத நிலை. ஓர் ஆளாக இருக்காத நிலை. கடவுள் ஓர் இருப்பு. கடவுளோடு எந்த தொடர்பாவது வேண்டும் என்றால் நீயும் அப்படி ஓர் இருப்பாக மட்டுமே இருக்க தெரிந்து கொள்ள வேண்டும். ஓர் ஆளாக அல்ல. சுதாரித்தவனாக. முழுச் சுதாரிப்போடு, இருக்க வேண்டும். ஆனால் நான் என்பது கழிந்த நிலையில் இருக்க வேண்டும். 
நான் என்பதைக் கழிக்க மிகச் சிறந்த வழி தவம் செய்வதல்ல. யோகப் பயிற்சி செய்வதல்ல. விரதம் இருப்பதல்ல. இல்லவே இல்லை. சிருஷ்டிதான் அதற்கான ஒரே வழி. சிருஷ்டக்கும் போது கடவுளோடு இணைந்த நிலை பெறுகிறாய். 

       மனத்தினுள் எதையோ தேடுவதன் மீதுதான் ஆன்மீகத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். மரணத்தைப் புரிந்து கொள்வதென்பது அனணத்தையும் புரிந்து கொள்வது. மரணத்தை அனுபவிப்பது எல்லாவற்றையும் அனுபவிப்பது. ஏனென்றால் மரணத்தை அனுபவிக்கும்போது வாழ்வின் உச்சத்தை அனுபவிப்பது மட்டுமில்லாமல், அன்பின் ஆழத்தை அனுபவிப்பது மட்டுமில்லாமல் தெய்வீகத்துக்குள் நுழைந்துவிடுகிறாய். மரணம் தெய்வீகத்தின் நுழைவாயில். மரணம் இறைவனின் ஆலயத்துக்கான நுழைவாயிலுக்கு மறுபெயர். தியானிப்பவன் தினமும் சாகிறான். 

       மெய்ஞ்ஞானி பிரக்ஞையோடு இறக்கிறான். உண்மையாக மரணம் வருமுன் மெய்ஞ்ஞானி இறந்துவிடுகிறான். அவன் தியானத்தில் இறக்கிறான். காதலர்களுக்கு இது என்ன என்று தெரியும். ஏனென்றால் சத்தியமான காதலில் பாதி மரணம் இருக்கிறது. அதனால்தான் காதல் தியானத்துக்கு வெகு அருகாமையில் இருக்கிறது. காதலிக்கத் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் தியானிப்பு இருக்கிறது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் தியானத்தைத் தெரிந்திருக்கிறார்கள். காதலர்களுக்கு மெளனம் என்றால் என்ன என்று தெரியும். அவர்களுக்கு நிச்சலனம் என்றால் என்ன என்று தெரியும். காதலர்களுக்குக் காலமற்ற நிலைதெரியும். ஆனால் போகிற போக்கில் அதைத் தெரிந்துகொண்டவர்கள். அவர்கள் அதை தேடிப் போனவர்களல்ல. 
மெய்ஞ்ஞானி பிரக்ஞையோடு சாவுக்குள் நுழைகிறார். சுவாதீனமாக நுழைகிறார். தியானம் முழுச்சாவு. சுவாதீனமான சாவு. தியானிப்பவன் தனக்குள் மரணிக்கிறான். சாவு வருமுன்னரேயே மெய்ஞ்ஞானி மரணித்துவிடுகிறார். அந்த உயரத்துக்கும் அந்த ஆழத்துக்கும் போய்வடுகிறார். போகப் போக தியானம் இயல்பாகி வடும்போது அவர் இறப்பை வாழ ஆரம்பித்துவிடுகிறார். பிறகு வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறப்பின் ஒரு கணமாகிப் போகிறது. ஒவ்வொரு கணமும் கடந்ததற்கு இறந்து போனவராக புத்துணர்வோடு இருக்கிறார். ஏனென்றால் கடந்ததற்கு இறந்து போகும்போது இருப்பதற்கு உயிர்ப்புப் பெறுகிறாய். 
தொடர்ந்து இறந்து கொண்டேயிருக்க அவர் விடியற்காலைப் பனித்துளி போல, தாமரை இதழ்களைப் போலப் புத்தம் புதிதாய் இருக்கிறார். அவருடைய புத்துணர்ச்சி, அவருடைய இளமை, அவருடைய காலம் கடந்திருக்கும் தன்மை, மரணிக்கும் கலையின் பாற்பட்டது. பிறகு சாவு வரும்போது அவர் பயந்து கொள்ள ஏதுமில்லை. அவர்தான் இறப்பைப் பல்லாயிரம் முறை சந்தித்திருக்கிறாரே! புளகாங்கிதம்தான். அப்படியே கிறங்கிப் போகிறார். நடனமாடுகிறார். ஆனந்தமாகச் சாக விரும்புகிறார். சாவு அவரிடம் பயத்தைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக மாபெரும் கவர்ச்சியைத்தான் காண்கிறார். சாவு அவரை இழுக்கிறது. 

       புத்தருடைய அகிம்சை முழுக்க வேறானது. குணவியல்பில் வேறுபட்டது. அவர் அகிம்சை பற்றிப் பேசும்போது உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்ற நிலையில் பேசுகிறார். யாரையாவது நோகடிப்பது என்றால் அது உன்னையே நோகடித்துக் கொள்வதாகிப் போகிறது. எதையாவது அழிக்கும்போது உன்னையே அழித்துக் கொள்வதாகிப் போகிறது. இன்னொருவருக்கு எதிரியாக இருப்பதும், வெறுப்புக் கொண்டிருப்பதும், எதிராக இருப்பதும் உன் ஜீவனுக்கு எதிராக இருப்பதாகிப் போகிறது. ஏனென்றால் அனைவருக்குள்ளும் அனைவரையும் விரவி நிற்பது ஒன்றே. 

      பிரக்ஞையோடு இறக்கும் அந்தக் கணத்தில் தியானத்தில் இறக்கும் அந்தக் கணத்தில் கடவுள் பிறக்கிறார். ஏனென்றால் தான் என்ற நீ மறைந்து போகிறாய். பிறகு இருப்பது என்ன? நிச்சலனம். சூல் கொண்ட மெளனம். முழுமையைச் சூலில் சமந்திருக்கும் மெளனம். நீ மறைந்து போகும்போது எல்லைக் கோடுகள் இல்லாமல் போகின்றன. அப்படியே இறந்துபோய் அனைவரோடும் ஐக்கியப்பட்டுப் போகிறாய். 
ஒரு சில கணங்களுக்குக் கவிஞன் மலரோடு ஐக்கியப்பட்டுப் போகிறான். சூரியோதயத்தோடு ஐக்கியப்பட்டுப் போகிறான். சிறகு விரித்துப் பறக்கும் பறவையோடு ஐக்கியப்பட்டுப் போகிறான். அவனே அணைத்தும் கூட. பிறகு எப்படி அவன் ஹிம்சிக்க முடியும்? எப்படி அவன் காயப்படுத்த முடியும்? எப்படி அவன் எதையும் அழிக்க முடியும்?
அவனுடைய வாழ்க்கை முழுக்கச் சிருஷ்டி மயம். மெய்ஞ்ஞானி முழுக்க முழுக்க ஒருசிருஷ்டிகர்த்தா. 

       அழித்தல் இயற்கையானதல்ல. சிருஷ்டி இயற்கையானது. வன்முறையல்ல. அருளே இயல்பானது. வன்முறையல்ல. அன்பே இயல்பானது.கோபமல்ல. வெறுப்பல்ல.அவை வன்முறையின் வித்துக்கள். அன்பு, அருள், பங்கீடு இவைதான் இயல்பானவை. இயற்கையாவும் இருப்பதே ஆன்மீகம். 

      விடுபட்டிருக்கும் நிச்சலனத்தைத் தெரிந்திரு. இதற்கு ஆசைகளில் இருந்து விடுபட்டிருப்பது என்ற பொருள். அப்போது அங்கே நிச்சலனம்தான். எந்த முயற்சியும் இல்லாமல் என்கிறார். ஆசையில்லாதபோது முயற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. இலக்கு இல்லையெனும்போது முயற்சி இல்லாமல் போய்விடுகிறது. லட்சியம் ஏதுமில்லையெனும்போது எதுவும் வேண்டும் என்றில்லாதபோது, இவ்வுலகத்திலும் சரி, அடுத்த உலகத்திலும் சரி, எதுவும் வேண்டாம் என்றிருக்கும்போது உனக்குள் எப்படி எந்த ஆரவாரமாவது இருக்கப் போகிறது? எல்லாமும் மெளனித்து விடுகிறது. இதுதான் உண்மையான மெளனம். 
இன்னொரு வகையான மெளனமும் இருக்கிறது. யோகாசனத்தில் அமர்ந்துவிடுவது. ஆழ்ந்து மூச்சு விடுவது. மந்திரம் ஒன்றைச் சொல்வது. மாதக் கணக்கில், வருடக்கணக்கில் மனதைக் கட்டாயப்பபடுத்திச் சும்மாயிருக்கச் சொல்வது. அப்போதும் ஒரு வகை நிச்சலனம் தோன்றும். ஆனால் அது கட்டாயத்தின் விளைவு. செயற்கையானது. உனக்குள் ஆழப் பார்க்கும்போது எல்லா ஆரவாரத்தையும் அடக்கி வைத்திருப்பது தெரிய வரும். அடியில் கிடக்கின்றன. மேற்புறத்தில் இல்லைதான். அடியே போய்த் தங்கியிருக்கின்றன. அது இன்னும் ஆபத்தானது. உணர்வின் மேல் நிலையில் இருந்தால் அதைத் தொலைத்துவிடுவது சுலபம். ஆனால் உணர்வின் ஆழத்துக்குப் போய்விட்டால் அதைத் தொலைப்பது ஏறக்குறைய முடியாத காரியமாகிப் போகிறது. 

         இயற்கையோடு போ. இயற்கையோடு இசைந்து போ. நீரோட்டத்தை எதிர்த்தன்றி நீரோட்டத்தோடு போய்க்கொண்டிரு. நதியைத் தள்ளாதே. நதியோடு மிதந்திரு. வாழ்க்கை பேரானந்தமாகிப் போகும். பரவசமாகிப் போகும். வரமாகிப்போகும். 
தூங்கும்போது பலருக்கும் பயங்கரச் சொப்பனங்கள் வருகின்றன. பலர் இந்தப் பயங்கரக் கனவுகளை என்ன செய்வது? என்று கேட்டு எழுதுகிறார்கள். இதைப்பற்றி நேரிடையாக ஏதும் செய்ய முடியாது. உன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். பகலில் நீ என்ன செய்கிறாய், என்ன நினைக்கிறாய் என்பவையே உன் இரவுக் கனவுகளை நிர்ணயிக்கின்றன. உன் இரவுகள் உன் பகல்களின் பிரதிபலிப்புகள்தான். உன் பகல் அழகாக இருந்தால், ஆனந்தமாக இருந்தால், அன்போடு இருந்தால் பயங்கரச் சொப்பனங்கள் இருக்காது. உன் பகல்கள் மெளனமாக இருந்தால், நிச்சலனத்தோடு இருந்தால், சிந்தனைகள் கழிந்திருந்தால், உள்ளீடு இல்லாமல் இருந்தால், பரிசுத்தமாக இருந்தால், முழுமையோடு இருந்தால், எந்த பதட்டமும் இல்லாமல் இருந்தால் எல்லாக் கனவுகளும் இல்லாமல் போய்விடும். கனவுகள் இல்லாத தூக்கம் கிடைக்கும். 
        மரணம் வரும்போதும் இதுதான் நடக்கிறது. உடல் விழும் போது உடனே சொர்க்கத்தைக் காண்கிறாய், சரியாக வாழ்ந்திருந்தால், சிரத்தையோடு வாழ்ந்திருந்தால், தியானித்து வாழ்ந்திருந்தால் அதுதான் நடக்கும். இல்லையேல் நரகம்தான். சொர்க்கமும் நரகமும் பூகோளத்தில் இல்லை. இந்த உடலை விட்டு நீங்கும்போது வருகின்றன. மனம் தனித்து விடப்படும்போது அமைந்து போய்விடுகிறது. மனதுக்கு எந்த வேலையும் தராமல் அப்படியே விட்டுவிட்டால் வாழ்க்கை முழுக்க எந்த விதை விதைத்தாயோ அதற்கான அறுவடையைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறாய்.
      மனோதத்துவமும் இதை ஏற்றுக் கொள்கிறது. ஒருவன் இறக்கும்போது உடனடியாக, செத்துக் கொண்டிருக்கும் கணங்களிலேயே கூட அவன் பயங்கரக் கனவுகளில் ஆழ்கிறான். அதாவது நரகத்தை அனுபவிக்கிறான். அல்லது அருமையான ஓரிடத்தைச் சென்று சேர்ந்துவிட்டதைப் போல உணர்கிறான். அதுவே சொர்க்கம்.
மூன்றாவது, நரகமும் இல்லை. சொர்க்கமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. துயரமும் இல்லை. அது நிருவாணம்--மோட்சம். இதை மொழி பெயர்க்க வேறு வார்த்தை இல்லை. ஏனென்றால் இந்திய மதங்கள் தவிரப் பிற மதங்கள் இரண்டைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. சொர்க்கம், நரகம் அவ்வளவுதான். இந்த மூன்றாவது அவற்றில் இல்லை. கிறித்துவம், இஸ்லாம், யூதம் ஆகிய இவற்றில் இல்லை. மாபெரும் இந்த விஷயம் இல்லை. 
அதனால்தான் இந்த மூன்று மதங்களும் பெளத்தத்தோடு ஒப்பிடும்போது சற்றே குறைப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்கிறேன். பெளத்தம் அதி உயர்ந்த சிகரத்தைத் தொட்டுவிடுகிறது. சொர்க்கம், நரகம் இரண்டையும் தாண்டிப்போய்விடுகிறது.
பரிபூரண மெளனத்தில் ஒருவன் இறக்கலாம். முழுசுதாரிப்போடு இன்பமும் துன்பமும் இல்லாமல், ஒருவன் இறக்கலாம். அப்படியானால் அவன் மீண்டும் பிறக்கப் போவதில்லை. வாழ்வு--சாவு என்ற அசிங்கமான சுழற்சியைத் தாண்டிப் போய்விடுகிறான். பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகிப் போகிறான். பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகிப் போவது நிருவாணம். தான் என்ற ஒருவனாக இல்லாமல் அவன் முழுமையாகிப் போகிறான். 
நிச்சலனம் பெறுவாய். கட்டாயம் ஏதுமில்லாத நிச்சலனம் பெறுவாய். பயிற்சி செய்தோ, பழகிக் கொண்டோ பெறும் நிச்சலனம் அல்ல. இயல்பான நிச்சலனம் பெறுவாய். ஆசையின் பயனின்மை தெரிந்துக் கொண்ட நிச்சலனம். லட்சியங்களின் முட்டாள்தனத்தைக் தெரிந்துக் கொண்ட நிச்சலனம். அந்த நிச்சலனம் பெறுவாய். புரிதல் மூலமாக, பயிற்சியின் மூலமாக அல்ல. நிச்சலனம் பெறுவாய். 
உடைந்து கிடக்கும் காண்டாமணி போலச் சும்மாயிரு. மெளனித்திரு. எந்த முயற்சியும் இல்லாமல் விடுபட்டிருக்கும் நிச்சலனத்தைத் தெரிந்திரு. கடந்தவனாகிப் போகிறாய். கடந்ததே ஆகிப் போகிறாய். 
இதுதான் சந்நியாசத்தின் இலக்கு. ஆன்மிகத்தின் இலக்கு. ஆன்மிகத்தின் மைய ஈடு இதுதான். விஞ்ஞானம் பாதியைத் தெரிந்து வைத்திருக்கிறது. கலை இன்னும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறது. ஆன்மிகம் மட்டுமே முழுமையைத் தெரிந்து வைத்திருக்கிறது. 

        விஞ்ஞானம் வாழ்வை இரண்டு வகைகளாகப் பகுத்து வைத்திருக்கிறது. தெரிந்தது. தெரியாதது. ஆன்மிகம் மூன்று வகைகளைக் காண்கிறது. தெரிந்தது, தெரியாதது, தெரிந்து கொள்ள முடியாதது. தெரிந்து கொள்ள முடியாததிலிருந்துதான் அர்த்தம் பிறக்கிறது. இன்று தெரிந்திருப்பது நேற்று தெரியாததாக இருந்தது. இன்றைக்கு தெரியாதது நாளைக்குத் தெரிந்துவிடப் போகிறது. இரண்டுக்குமிடையே இயல்பளவில் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் காலத்தின் கோலம்தான். 
        தெரிந்து கொள்ள முடியாதது வித்தியாசமானது. இயல்பிலேயே வித்தியாசமானது. தெரிந்தது, தெரியாதது ஆகியவற்றிலிருந்து வித்தியாசமானது. தெரிந்து கொள்ள முடியாதது என்றால் அது ரகசியமாகவே இருக்கிறது. எவ்வளவுதான் ஆழப் போய்ப் பார்த்தாலும் அந்த ரகசியத்தை நீக்கிவிட முடியாது. மேலும் பார்க்கப் போனால் எந்த அளவுக்கு அதற்க்குள் ஆழப் போகிறாயோ அந்த அளவுக்குஅது மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டே போகும் அதிரகசியம். 

        காலை நேரத்து சூரியனால் ஆவியாகிப் போகும் பனித்துளியைப்போல, ஆன்மிகத் தேடல் கொண்டவன் ஒரு குறிப்பட்ட கணத்தில் இல்லாமல் போய்விடுகிறான். அதற்குள் மறைந்து போகிறான். ரகசியம் இருந்து கொண்டே இருக்கிறது. அதுதான் நிறைவேற்றத்தின் சிகரம். திருப்தியின் சிகரம். வீடடைந்து விடுகிறான். அதைக் கடவுள் என்று சொல்லிக் கொள். நிருவாணம் என்று சொல்லிக் கொள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். 

        களியாட்டங்கள் மனம் உனக்குத் தரும் கையூட்டு. ரேடியோவைப் பாட விடு, டிவியைப் போடு, சினிமாவுக்குப் போ, கிளப்புக்காவது போப்பா! வம்பு பேசு. எதையாவது செய்.

Friday 15 May 2015

மூளை -- தலைமை செயலகம்

மூளையே முதல் மந்திரி…

மனித உடலின் தலைமை செயலகம் மூளை.
உனக்கு மூளை இருக்கா ? என்று அறிவு இல்லாத செயல்களைச் செய்பவர்களைபார்த்து கேட்கின்றோம். மூளை செயலிழந்தது, மூளை இறப்பு அதனால் மற்றஉறுப்புகள் தானம் செய்யப்பட்டது என அண்மை காலங்களில் பத்திரிக்கைகளில்பார்க்கின்றோம். எனவே மூளை என்ற உறுப்பு, மற்ற உடல் உறுப்புகளின் செயல்இயங்கியல் நிகழ்ச்சிகளிலும், மனம் தொடர்பான அறிவு சார்பான இயக்கங்களிலும்முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர முடியும்.
மேல்நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடுகளை பொறுத்து இரண்டு வகையாக பிரித்துள்ளனர்.
1. உடல் இயக்கம் சார்ந்த மூளை (Anatomical brain)
2. மன இயக்கம் சார்ந்த மூளை (Functional brain)
இது தவிர மூளையானது அதன் அமைப்பை பொறுத்து பல பகுதிகளாகபிரிக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் மிக முக்கிய உறுப்பாக இருப்பதால்மிகவும் பத்திரமாக எளிதில் உடையாத கபால ஓட்டினுள் வைக்கப்பட்டுள்ளது.
இதன் பகுதிகள்
பெருமூளை, சிறுமூளை, பான்ஸ், முகுளம் என பிரிக்கப்படுகிறது.
ஒரு கணிப்பொறி எவ்வாறு பல்லாயிரக்கணக்கான செய்திகளை சேகரித்துபாதுகாக்கின்றதோ, அதுபோல் மூளையும் நாம் பார்த்தது, கேட்டது, உணர்ந்தது,சுவைத்தது, நுகர்ந்தது என ஐந்து முக்கிய உணர்வு உறுப்புகளின் வாயிலாககிடைக்கும் தகவல்களை தனது செல்களில் பதியவைத்துக் கொள்கிறது. தேவையானநேரத்தில் தேவையான இடத்தில் தேவையான செய்திகளை வெளிக்காட்ட உதவுவது மூளை.
மூளையானது பலகோடிக்கணக்கான (சுமார் 800 கோடி) சிறப்புச் செல்களால் தன்னைஉருவமைக்கிறது. அதன் பெயர் நியூரான். இந்த நியூரான்கள்தான் மூளையின்கட்டளைகளை உடல் செல்களுக்கு கடத்துகிறது. மூளையை சிந்திக்க செய்கிறது.உடலில் ஏற்படும் உணர்வுகளை மூளைக்கு செலுத்துகிறது.
பொதுவாக மூளையானது சராசரியாக வளர்ந்த ஆண்களுக்கு 1400 கிராம் எடை உள்ளது.பெண்களுக்கு அதைவிட சற்று குறைவுதான் (1200 கிராம்) ஆனால் மூளையின்எடைக்கும் அறிவுத் திறனுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. மூளையில் உள்ளமடிப்புகள் (கைரி மற்றும் சல்கஸ்) அமைப்பை பொறுத்தே ஒரு உயிரின்அறிவுத்திறன் தீர்மானிக்கப் படுகிறது.
பிரதம மந்திரியான மூளை தன்னுடைய வேலைகளைச் செய்ய தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள பன்னிரெண்டு ஜோடி முக்கிய மந்திரிகளையும் (கிரேனியல்நரம்புகள் எனப்படும் மூளை நரம்புகள்) 31 ஜோடி ராஜாங்க மந்திரிகளையும்(மூளைத் தண்டுவடத்தில் இருந்து கிளம்பும் தண்டுவட நரம்புகள்)நியமித்துள்ளது.
உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல் கல்லீரல், மண்ணீரல், கணையம்,சிறுநீரகம் மற்றும் இரைப்பை ஆகியவற்றை வேகஸ் (ஙச்ஞ்தண்) எனப்படும்பத்தாவது மூளை நரம்பின் மூலமாக நேரடியாக கட்டுப்படுத்துகிறது.
இது தவிர நம்முடைய உணர்வுகளை தூண்டுகின்ற வெளிப்படுத்துகின்ற செயல்களானஒலி, ஒளி, மணம், சுவை முதலியவற்றின் உறுப்புகளான காது, கண், மூக்கு,நாக்கு ஆகியவற்றையும் நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
யாகாவாராயினும் நாகாக்க என்பது வள்ளுவர் வாக்கு. பேச்சு என்பது ஒருவரின்நடத்தை, வளர்ப்பு படிப்பு மற்றும் எண்ணங்களை வெளிப் படுத்துகிறது. எனவேவார்த்தையின் வடிவங்களை வேகங்களை, ஏற்ற இறக்கங்களை ஹைபோ கிளாசல்,கிளாளோபெரின்சியல் என்ற முக்கிய அமைச்சர்கள் மூலமாக நேரடிக்கடடுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது மூளை.
நமக்கு பிடித்தவற்றைப் பார்க்கும்போது, கேட்கும்போது, சுவைக்கும்போதுமுகத்தில் மகிழ்ச்சி தோன்றுகிறது. பிடிக்காதவற்றை கேட்கும்போது முகம்சுருங்குகிறது. பாம்பு, இருட்டு போன்றவற்றை பார்க்கும்போது பயம்முகத்தில் தெரிகிறது. நமது உணர்வுகளை வெளிக்காட்டும் கண்ணாடி முகம்.முகத்தில் ஏற்படும் அஷ்ட லட்சணம் என்று சொல்லப்படும் எட்டுவிதமானபாவனைகளையும் தேவையான சமயத்தில் காட்ட உதவுவது 8வது முக்கிய மந்திரியானமுக நரம்பு (பேசியல் நர்வ்)
இந்த பன்னிரெண்டு ஜோடி முக்கிய மந்திரி நரம்புகளும் முக்கிய இலாகாபொறுப்புகளுடன் மூளையின் நேரடித் தொடர்பில் இருக்க, குடிமக்களாகிய கை,கால், உடல் இயக்கங்களை கட்டுப்படுத்த 31 ஜோடி மூளைத்தண்டு வட நரம்புகளானஇணை அமைச்சர்களை நியமித்துள்ளது. அவர்கள் நாம் நடக்க, நிற்க, ஓட, கைகால்களை அசைக்கக் கூடிய வேலைகளை செய்கிறார்கள்.
இவை அனைத்தும் நியூரான் மூலமாக தங்கள் வேலைகளைச் செய்துகொண்டு இருக்க,சத்தமில்லாமல் மற்றொரு முக்கிய பணியைச் செய்கிறார் நமது பிரதம மந்திரி.
அது தன்னுடைய வேதியல் சுரப்பிகள் மூலமாக மனம் என்ற கண்ணுக்குத் தெரியாதஆனால் நம்மை முழுவதும் ஆளக்கூடிய மாய மந்திரவாதியை தன் கட்டுப்பாட்டில்வைத்திருப்பதுதான் .
வாழ்க்கையில் அனைவரும் வெற்றி தோல்விகளை சந்திப்பது வழக்கமான ஒன்று.ஆனால் தினசரி செய்தித்தாள்களில் பார்க்கும்போது தேர்வில் தோல்வி காதல்தோல்வி, வியாபாரத்தில் தோல்வி அதனால் தற்கொலை செய்து கொண்டனர் எனபார்க்கிறோம்.
தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதுதான் முடிவா?
அல்லது தோல்வி அடைந்த அனைவருமே தற்கொலை செய்து கொள்கிறார்களா?
இல்லை. பிறகு ஏன் ஓரு சிலர்மட்டும் இந்த முடிவை தேடிக்கொள்கிறார்கள்?
இதற்கு பதில் மனதிடம் இல்லாதது. அந்த மனதிற்கு திடத்தை தருவது மூளையில்சுரக்கக்கூடிய டோபமைன், செரடோனின் மற்றும் அசிடைல் கொலின் போன்றவேதிப்பொருட்களே.
மூளையின் இயக்கச் செயல்களை இந்த வேதிப்பொருட்கள் கட்டுப்படுத்துகின்றது.இதில் குறைபாடு ஏற்படும்போதே மனச்சோர்வு முதல் மனச்சிதைவு வரையிலான மனநோய்கள் ஏற்படுகின்றது. எண்ணச் சிதறல்கள், ஆளுமைக் கோளாறுகள், நடைமுறைகோளாறுகள் முதலியவையும் இதனாலேயே ஏற்படுகிறது.
நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மற்றும் மனதின் முழுத் திறனையும்கட்டுப்பாட்டில் வைத்து, ஒரு மனிதனை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும் மூளை மனிதனின் தலைமைச் செயலகம் மட்டுமல்ல.. அவனின் ஆணிவேரும்கூட…

Thursday 14 May 2015

ART OF LISTENING / கேட்பது என்பது ஒரு கலை

                         
              பேச்சுக் கலை என்பது சாதாரணமான ஒன்றல்ல. எல்லோராலும் மனதில் நினைப்பதைச் சரியாக சொல்லி விட முடியாது. பல வேளைகளில் நான் தடுமாறித் தவிப்பதுண்டு. மனதில் தோன்றுகின்ற சிந்தனைகளை, எண்ணங்களை முழுதாகச் சொல்ல முடிவதில்லை. நாம் நினைப்பது ஒன்று ஆனால் சொல்ல முயற்சிக்கும் போது வார்த்தைகள் மாறி வேறொன்றாக வந்து விழுந்துவிடும். உரையாடலின் முடிவில் சொல்ல வந்ததை முழுசாகச் சொல்லவில்லையே என்ற விரக்தி தோன்றும். இந்தப் பேச்சுக் கலையை விடை மிகக் கடினமானது கேட்கும் கலை.

ஒருவர் பேசுவதைக் கேட்பதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது என்று சாதாரணமாக நினைத்து விட முடியாது.பிறர் பேசுவதை நாம் கேட்கும் போது நாம் நமது மனதின் எண்ணங்களோடு சேர்த்தே தான் கேட்கிறோம்.

பேசுபவரின் சொற்களோடு நமது மனதின் தன்மைகள் கலந்து பல விதமான வியாக்கியானங்களை அந்த பேச்சுக்குக் கொடுத்துக் கொண்டே தான் கேட்கிறோம். பல வேளைகளில் பேசுபவர் பேசிக் கொண்டேயிருப்பார். நமது முகம் மட்டும் கேட்பது போல பாவனை செய்து கொண்டிருக்கும்; ஆனால் மனம் அந்த பேச்சில் லயித்து இருக்காது. பல
வேளைகளில் சொல்பவர் சொல்வதை நமது மனதிற்குப் பிடித்த வகையில் மாற்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்து கொள்வோம்.

ஆக கேட்பது என்பது சுலபமான ஒன்றல்ல என்பது நாம் நமது மனதின் ஓட்டத்தை உற்று நோக்கினால் தெரிய வரும். கேட்பது என்பது ஒரு கலை. அந்தக் கலையை முறையாகப் பழகத்தானே வேண்டும்!

Friday 24 April 2015

முடிவெடுக்கும் மனம் - ஓம் - ஓஷோ

        ஒருமுறை நீ முடிவெடுத்து விட்டால் பின் எல்லா சந்தேகங்களையும் விட்டு விடு. அதற்கு முன் அதை உபயோகி. சந்தேகத்தை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய். அனைத்து சாத்தியக்கூறுகளையும் யோசி, பின் தேர்ந்தெடு.

உறுதியில்லாத மனிதன், முடிவெடுக்க முடியாத மனிதன் சந்தேகத்தில் இருப்பான். அதுஇணைப்புணர்வுக்கு எதிரானது. ஏனெனில் இணைப்புணர்வு தன்னிடம் இணைப்புணர்வுகொள்வது. சந்தேகம் தன்மேல் நிச்சயமற்றதனம். நீ உன்னிடமே இணைப்புணர்வோடில்லை..

நீ எதை செய்தாலும் நீ அதை செய்ய விரும்புகிறாயா இல்லையா அதனுள் போவது நல்லதாஇல்லையா என்பதில் உனக்கு உறுதி இல்லை. முடிவெடுப்பது அங்கில்லை. முடிவெடுக்கும் மனம் இல்லாமல் நீ பாதையினுள் நுழைய முடியாது. நீ முடிவெடுக்க வேண்டும். தீர்மானிக்க வேண்டும். உன்னுள் எப்போதும் ஒரு பகுதி வேண்டாம் என்றே சொல்லும் போது
எப்படி முடிவெடுப்பது அது சிரமம்தான்.
உன்னால்முடிந்த அளவு யோசனை செய். எவ்வளவு நேரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு நேரம் கொடு. எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும், எல்லா விதமான மாற்று வழிகளையும்யோசித்துப் பார். பின் முடிவெடு. ஒருமுறை நீ முடிவெடுத்து விட்டால் பின் எல்லாசந்தேகங்களையும் விட்டு விடு. அதற்கு முன் அதை உபயோகி. உன்னால் என்னவெல்லாம்சந்தேகப்பட முடியுமோ அத்தனையும் செய். அனைத்து விதமான சாத்தியங்களையும்
யோசித்துப்பார். பின் தேர்ந்தெடு. ஆரம்பத்தில் அது முழுமையான முடிவாக இருக்காது. அது சாத்தியமில்லை. அது அதிகபட்சமான முடிவாக இருக்கும். உனது பெரும்பான்மை மனது சரி என்று சொன்ன முடிவாக இருக்கும்.
ஒருமுறை நீ தீர்மானித்துவிட்டால் பின் சந்தேகப்படாதே. சந்தேகம் தன் தலையை தூக்கும். ஆனால் நீ நான் முடிவெடுத்து விட்டேன். முடிந்தது. இது முழுமையான முடிவல்ல. எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற வில்லை, ஆயினும் நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு நான் யோசனை செய்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்று நீ அதனிடம் சொல்லி விடலாம்.
ஒரு முறை நீ தேர்ந்தெடுத்து விட்டால் பின் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காதே,
ஏனெனில் சந்தேகம் நீ இடம் கொடுப்பதால் மட்டுமே இருக்கும். நீ அதைப் பற்றி திரும்ப திரும்ப நினைப்பதன் மூலம் அதற்கு சக்தி கொடுக்கிறாய். பின் ஒரு நிச்சியமற்ற தன்மை உருவாகிறது. முடிவெடுக்க முடியாத நிலை ஒரு மிக மோசமான விஷயமாகும். நீ மிக மோசமான நிலையில் இருக்கிறாய் என்பதைத்தான் அது காட்டுகிறது. உன்னால் எதையும் தீர்மானிக்க
முடியாத போது நீ என்ன செய்ய முடியும் உன்னால் எப்படி செயல்பட முடியும்.
ஓம். இந்த நாதமும் தியானமும் உதவக் கூடும். அது உதவும். ஏனெனில் நீ அமைதியாகமௌனத்தில் ஆழும்போது முடிவெடுப்பது எளிதாக இருக்கும். அப்போது நீ ஒரு கூட்டமல்ல,குழப்பத்தில் இல்லை. பல குரல்கள் சேர்ந்து கேட்கும்போது எது உன்னுடைய குரல் என்றுஉன்னால் அடையாளம் காண முடியாது. ஓம் என்று உச்சரி, அதன் மேல் தியானி. – குரல்கள்
அமைதியாகும். பலகுரல்கள் கேட்கும்…. இருப்பினும் அவை உன்னுடையது அல்ல என்பதைஇப்போது உன்னால் பார்க்க முடியும். உனது அம்மா, அப்பா, ஆசிரியர், சகோதரர்கள் ஆகியோரின் குரல்கள் – இவை எதுவும் உன்னுடையது அல்ல. நீ அவற்றை புறம் தள்ளி விடலாம், ஏனெனில் அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை.
ஓம் என்று உச்சரித்து மௌனமாகும்போது நீ சாந்தமாக, தெளிவாக, அமைதியாக,
ஒருமுகப்படுபவனாக, மாறுவாய். அந்த மோனத்தில் எது உண்மையான குரல் என்று உன்னால்பார்க்க முடியும். உன்னுள் இருந்து எழும் உறுதியான குரலை உன்னால் கேட்க முடியும்.
நீ சந்தைக்கடையில் நிற்கும்போது பலர் பேசிக் கொண்டும் பல விஷயங்கள் நடந்து கொண்டும் இருக்கும் போது என்ன நடக்கிறதென்று உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போகும். சந்தைக்கடையில் மக்கள் சத்தமிடுவர் – அவர்களுக்கு அவர்கள் மொழி தெரியும் ஆனால் உனக்கு அது என்ன என்று புரியாது. அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என
நீ நினைப்பாய்.
அப்போது – நீ ஒரு இமயமலைபகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்குப்  போய் அங்கு ஒரு மலை குகையில் உட்கார்ந்து இருப்பதைப் போல – ஓம் என்று உச்சரிக்க ஆரம்பி. நீ நிதானமடைவதை, எல்லா பதட்டங்களும் குறைவதை, நீ ஒன்றாவதை, நீ ஒருங்கிணைவதை நீ உணர்வாய். அந்த கணத்தில் தீர்மானித்தல்
சாத்தியப்படும். அப்போது முடிவெடு. பின் திரும்பி பார்க்காதே. பின் மறந்து விடு.
முடிவெடுத்தாகி விட்டது. இப்போது திரும்பி பார்ப்பது கிடையாது. முன்னோக்கி
செல்லுதல் மட்டுமே.
சில சமயங்களில் சந்தேகம் நாய் போல உன்னை தொடர்ந்து வந்து குரைக்கும். அதைகவனிக்காதே, அதில் கவனம் செலுத்தாதே. மெதுமெதுவாக அது நின்று விடும். அதற்கு ஒருவாய்ப்பு கொடு, எல்லா சாத்தியங்களையும் யோசனை செய். ஆனால் ஒரு முறைமுடிவெடுத்துவிட்டால் பின் சந்தேகத்தை விட்டு விடு. ஓம் நாதம் தீர்மானம் செய்ய, ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும்.

Monday 13 April 2015

கோபம் பற்றி Osho

  கேள்வி:  கோபம் என்பது என்ன ? சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம்சாந்தமாகவும் ஒன்றிணைந்தவனாகவும் இருப்பது எப்படி ?

பதில்: கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது
விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை
தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற
விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை.
அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடியசாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா
என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது
விளையாட்டுத்தனமாகவும் இரு.
விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில்
அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது
விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது,
கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர்போல இருந்து பழக வேண்டும்.
நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது
தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னைஎரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன
வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும்
தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே
கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னைஎரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்குசெல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தைஉண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும்
ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒரு
புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும்
அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.

Friday 10 April 2015

புராணக் கதைகளின் பின்னால்...

இந்திய புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்!! 

சூரியக் குடும்பம் நமது ரிக் வேதத்திலேயே, " சூரியன் தன்னை தானே சுற்றி வருவதாகவும், இது பூமி மற்றும் மற்ற கோள்களை தன் ஈர்ப்பு விசையின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும். அந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ரிக் வேதத்தில் ஓர் குறிப்பில், பூமி தன்னை தானே சுற்றியப்படி சூரியனை சுற்றி வருவதாகவும், பூமியில் உள்ள உயிர்களும் அதனுடன் சேர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது

ஒளியின் வேகம் வேத ரிஷிகளில் ஒருவரான சயனா ரிஷி 14 ஆம் நூற்றாண்டிலேயே ஒளியின் வேகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவென்றில், " 2,202 யோஜனாவை அரை நிமிஷாவில் பயணிக்கும் சூரியனை நான் வணங்குகிறேன்" என்பது போல கூறியிருக்கிறார். ஒரு யோஜனா என்பது ஏறத்தாழ 9 மைல்கள் ஆகும். நிமிஷா என்பது 16/75 வினாடி ஆகும். ஆதலால், 2,202 (யோஜனா) x 9 (மைல்) x 75/8 (நிமிஷா) = 185,794 (வினாடிக்கு, மைல் தூரம்) அறிவியலில் இப்போது ஒளியின் வேகமென வினாடிக்கு 186,282.397 மைல் தூரம் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ சயனா ரிஷி கூறியிருப்பது ஒத்துப்போகிறது

ரிக் வேதத்தில் மற்றுமொரு இடத்தில், "கதிரவனே, நீ பரிசளித்த ஒளிக்கு நீயே திரையாகி மறைக்கும் பொழுதில் புவி இருள் சூழ்ந்து திகைக்கிறதே" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சூரிய ஒளியின் மூலம் ஒளிப் பெற்று இயங்கும் நிலவை கிரகணத்தின் பொழுது சூரியனே மறைக்கும் தருணத்தில் பூமி ஒளியின்றி காணப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

சூரியன், பூமிக்கு இடையேயான தூரம்

துளசிதாஸ் அவர்கள் இயற்றிய அனுமன் சாலிஸாவில், "ஆயிரம் யோஜனாக்கள் தாண்டி இருக்கும் சூரியனை பழம் என நினைத்து அனுமன் உண்டான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, 1 யுகம் = 12,000 வருடங்கள், 1 சாஸ்ர யுகம் என்பது = 1,20,00,000 வருடங்கள், மற்றும் 1 யோஜனா என்பது ஏறத்தாழ 8 முதல் 9 மைல்கள். "Yug sahsra yojana par bhanu, leelyo taahi madhura phal jaanu" என்று சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 153,6000,000 கி.மீ தூரம் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அறிவியலில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் என்று, 152,000,000 கி.மீ என்று கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏறத்தாழ சரியாகக் கணக்கிட்டுள்ளனர்

பிரம்மகுப்தா, 7ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு 36,000 கி.மீ என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய அறிவியல் 40,075 கி.மீ அன்று கூறுகிறது. 1% தவறு இருந்தாலும் ஏறத்தாழ எந்த கருவியும் இன்றி பிரம்மகுப்தா அவர்கள் கூறியிருக்கிறா

சூரிய சித்தார்ந்தா, ஓர் வருடத்தின் அளவை நான்கு வகையில் அளந்து கணக்கிட முடியும் என்று கூறுகிறார். அதை, நட்சத்திரா, சவனா, லூனார் மற்றும் சவுரா என்றும் குறிப்பிடுகிறார். இதில், சவுரா எனும் முறையில் சரியாக 365 நாள், 6 மணி நேரம், 12 நிமிடங்கள், 30 வினாடிகள் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான சான்று "குனார்க்" கோவிலில் இருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்.

உலகிலேயே முதல் முறையாக இந்து சமவெளி நாகரீகத்தில் தான் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டது. கி.மு 3300 - 1300 காலக்கட்டத்திலேயே இதை பயன்படுத்தியுள்ளனர்.

9000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சூத்திரங்களில் ஆயிரக்கணகான வியாதிகளுக்கு, 700 வகையான மூலிகைகளின் மூலம் மருத்துவ குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன.

Wednesday 25 February 2015

OSHO ABOUT FRIENDSHIP

1.நட்புணர்வு
நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.
உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.
பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.
வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் – வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.
நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.
நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
2.கவனித்தல்  [கவனம்]
உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே, ஒரு கவனிப்பவனாக மட்டுமே, ஒரு சாட்சியாக மட்டுமே இரு – தொடர்பற்றவனாக, தொலைவில் இருப்பவனாக, வேறுபட்டவனாக இரு. எண்ணங்களை வெறுமனே பார்! அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே, அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே! ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு! மன ஓட்டம் நிகழட்டும், ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்! அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல், அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், தள்ளி நின்று பார்.
எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்ந்தாலும் கவனி.
உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும் ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி.
ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான், ஒரு சாட்சியாக இரு!
மனதை விட்டுவிடு, கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்.
கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால் நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே.
முழுமையான சாட்சிபாவம் பெற, முழுமையான கவனிப்பவனாக மாற சிறிதுகாலம் பிடிக்கும், பொறுத்திரு.
3.வாழ்க்கை
வாழ்வை பருகுபவனாக, இயற்கையின் சாற்றை பருகுபவனாக, குடிகாரனைப் போல இரு. தூங்குமூஞ்சியாக இருக்காதே, ஒரு தூங்குமுஞ்சி இறந்தவனே! வாழ்வின் ரசத்தை பருகு, அது கவிதை ரசமும் அன்பு மயமும் அளவுகடந்த சாறும் கொண்டது. நீ எந்த வினாடியும் வசந்தத்தை கொண்டு வரமுடியும். வசந்தத்துக்கு ஒரு அழைப்பு விடு! சூரியனும் காற்றும் மழையும் உன்னுள் நுழைய அனுமதி.
வாழ்க்கை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதல்ல, அதிலும் குறிப்பாக மனித இனத்துக்கு அறவே கிடையாது.
நீ எதைச் செய்தாலும் வாழ்க்கை அதுவாகவேதான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.
வாழ்க்கை தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கொண்டதல்ல, ஆடு, பாடு, அனுபவி, ஆனந்தப்படு, கொண்டாடு!
வாழ்க்கைக்கு எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது, அது எப்போதும் எல்லாவற்றையும் கடந்து செல்லும்.
வாழ்க்கை ஒரு நம்பிக்கையல்ல, அது உண்மைக்கான ஆழமான தேடல்.

வாழ்க்கை ஒரு சாகச பயணம், வாழ்க்கை ஒரு தொடர்ந்த தேடல்தான்

மனதை நிறுத்துவதும் இயக்குவதும் ~~ OSHO

1. மனதை நிறுத்துவதும் இயக்குவதும்.
மனம் பல எண்ணங்களாலும் பல வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. நீ எந்த கம்ப்யூட்டரை வேண்டுமானாலும் நிறுத்தலாம், இயங்கச் செய்யலாம். ஆனால் உனது மனத்தை நிறுத்தச் செய்ய உன்னால் முடியாது. அதற்கான பட்டன் இல்லை. கடவுள் இந்த உலகத்தை, மனிதனை, உருவாக்கும்போது மனத்தை நிறுத்துவதற்கான பட்டனை எங்கே வைத்தார் எனற விவரமே இல்லை. அதனால் மனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான சுவிட்சு இல்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓடிக் கொண்டே இருக்கிறது.
இந்த தொணதொணப்புக்கு காரணம் நமது கல்வி முறைதான். அது அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் அது எப்படி மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே சொல்லித் தருகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது நீ தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல் படுகிறது.
நம்மால் அதையும் சொல்லிக் கொடுக்க முடிந்தால்…… அது சாத்தியம்தான். இதைதான் நான் உங்களிடம் வற்புறுத்த விரும்புகிறேன். நாம் அதை தியானம் என அழைக்கிறோம். மனது தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும். அது இரண்டு வழிகளில் உதவும். நீ இதுவரை அறிந்திராத ஒருவிதமான அமைதியை, ஒருவிதமான மௌனத்தை அது உனக்கு கொடுக்கும். உன்னைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உனக்கு கொடுக்கும். எப்போதும் தொணதொணத்துக் கொண்டிருக்கும் மனதினால் அந்த அறிமுகம் கிடைக்காமல் இருக்கிறது. அது உன்னை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவதாக இந்த தியானம் மனதுக்கு ஓய்வை கொடுக்கும். மனதுக்கு ஓய்வை கொடுக்கும்போது அது விஷயங்களை மேலும் அதிக திறமையோடும், அதிக புத்திசாலித்தனத்தோடும் செய்யும் வலிமை பெறும்.
ஆக இரு விதமாகவும் நீ – மனதின் விதமாகவும் இருப்பின் விதமாகவும் – பயன் பெறுவாய். எப்படி மனதின் இயக்கத்தை நிறுத்துவது, எப்படி அதனிடம், போதும். நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதே. நீ ஓய்வெடுத்துக் கொள். என்று கூறுவது எனக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தேவைப்படும்போது மட்டும் மனதை உபயோகப் படுத்து. பின் அது எப்போதும் இளமையாகவும், புதிதாகவும், மிகவும் சக்தியோடும், ,புத்துணர்வோடும் இருக்கும். பின் நீ சொல்வது எதுவும் வற்றிப் போனதாக இராது. அதில் உண்மையும் நேர்மையும் இருக்கும், அது ஆணித்தரமானதாக, ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கும். அதனுள் வாழ்விருக்கும். நீ அதே வார்த்தைகளை உபயோகிக்கலாம், ஆனால் ஓய்வெடுத்ததன் மூலமாக மனம் மிகவும் சக்தி பெற்றிருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு போல மிகவும் வீரியமாக வெளி வரும்.
தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.
முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். –அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.
மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் – அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.
இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன்.  வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.
தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது.
தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும்.
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று.
மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.
மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.
பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும். 
பின் இருப்பு முதலாளியாகும். பின் அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும். 
2.உன்னுடைய மனதின் நிலையை மாற்றுதல்
காதில் போடப்படும் துளைகள் மிக முக்கியமான அங்குபஞ்சர் நிலைகளாகும். அவை நினைவாற்றலோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. காது குத்தப்படும்போது ஏற்படும் சக்தியாற்றல் ஒரு மின்னலைப் போல இருக்கும். உண்மையில் காது குத்துவது சில மனதின் தடுமாற்றங்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சீனாவில் இது ஒன்றுதான் மனது நிலைமாற்றங்களுக்கு சிகிச்சையாகும்.  இந்த துளை போடுவதன் மூலம் தேவையற்ற தடைகளை நீக்கி சக்தி மூளைக்கு நேரடியாக பாய உதவும். இது நினைவாற்றலை அதிகப் படுத்த மிகமுக்கியமான கருவியாகும்.
இது இந்தியாவில் ஒரு சடங்காகும். காது குத்துவதன் மூலம் வாழ்வின் சக்தியில் அடிப்படையான ஒரு மாறுதல் நிகழும். காது குத்துவது என்பது குழந்தைகளுக்கு இன்றியமையாதது. பிறந்த சில நாட்கள் கழித்து காது குத்துவது என்பது சம்பிரதாயமாக உருவாகி உள்ளது. என்று ஓஷோ கூறுகிறார்.
யுக்தி
செய்யும் நேரம்-   நீ மிகவும் டல்லாக, கவலையாக, கோபமாக, சோகமாக இருக்கும்போது.
செய்முறை  -  (உன் காதுகளை குத்திக் கொள்.  சும்மா விளையாட்டுக்கு)
உன் காதுநுனியை பிடித்துக் கொள், அவற்றை கடினமாக அழுத்து. அப்போது உன் மனதின் நிலையில் ஒரு வித்தியாசத்தை காண்பாய்.
3. மூளையை சமன்படுத்துதல்.
எனது தலையின் இடது வலது பாகங்களில் வேறுவேறு விதமான உணர்வுகளை உணர்கிறேன். சமன் படுத்திக்கொள்ள என்ன செய்வது.
செய்யும் காலம் – ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வீதம் 15 நாட்கள்.
முதல் படி – அமைதியாக அமர்ந்துகொண்டு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு உனது கண்களை நீயே அழுத்து. நீ கண்ணை அழுத்தும்போது கண்ணுக்குள் வெளிச்சம் தெரியும். அதுவரை அழுத்து. உனது கண்களை மிகவும் கஷ்டப்படுத்தாதே. சிறிதளவே போதுமானது. அந்த வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இரு. இது பல விஷயங்களை சமன்படுத்தும்.
இரண்டாவது படி – இப்போது 5 நிமிடங்களுக்கு தளர்வாக இரு.
மூன்றாவது படி – திரும்பவும் அழுத்து.
உனது இரண்டு மூளைகளும் தனித்தனியாக செயல்படுகின்றன. ஒவ்வொருவருடைய மூளையும் அப்படித்தான். ஆனால் தியானம் உன்னை ஆழமாக தாக்கும்போது இந்த வேறுபடுதலும், வித்தியாசங்களும் காணாமல் போய் விடும். இந்த பயிற்சி உன்னுடைய மூளையில் பல விஷயங்களை சமன்படுத்தும். நீ மிகவும் அமைதியாகவும் ஒருமுகப்பட்டதாகவும் உணர்வாய்.

Friday 20 February 2015

BE PERFECT......சரியாக செய்தலும் முழுமையாக இருத்தலும்

சரியாக செய்தல் என்ற இந்த மனோபாவமே மக்களை பைத்தியமாக்குகிறது. சரியாக செய்ய
வேண்டும் என்பவன் கிறுக்கனாகத்தான் இருக்க வேண்டும். அவன் சரியாக இல்லாதவரை அவனால் வாழ்வை அனுபவிக்க முடியாது. மேலும் சரியாக இருப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது இயல்பல்ல. முழுமைதான் சாத்தியம், சரியாக இருத்தல் என்பது சாத்தியமல்ல.
சரியாக இருத்தலுக்கும் முழுமையாக இருப்பதற்க்கும் மிகப் பெரிய வேறுபாடு
உள்ளது. சரியாக செய்தல் என்பது எங்கோ எதிர்காலத்தில் வைக்கும் குறிக்கோள். முழுமை
என்பது இப்போது இங்கே உணரப்படும் அனுபவம். முழுமை என்பது வாழ்வின் லட்சியமல்ல. அது வாழ்க்கை வழி. நீ உன் முழு மனதோடு ஒரு செயலில் ஈடுபட்டால் நீ முழுமையாக
இருக்கிறாய். முழுமை மொத்தத்தை, ஆரோக்கியத்தை, ஒழுங்கை கொண்டு வரும்.
சரியாக செய்பவன் முழுமையை முற்றிலுமாக மறந்து விடுவான். அவனுக்கு தான் எப்படி
இருக்க வேண்டுமென்பதில் சில கருத்துக்கள் இருக்கும், அதை அடைய காலம் தேவைப்படும்.
அது உடனடியாக நிகழாது, நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது இந்த பிறவியில், அல்லது மறு பிறவியில் ஆகவே வாழ்வு தள்ளிப்போடப்படுகிறது.
கடந்த காலத்தில் மனிதன் வாழவே இல்லை. அவனது வாழ்வு தள்ளிப்போடுதலாகவே மாறி
விட்டது. நான் எதிர்காலத்தை பற்றிய எந்த கருத்தும் இன்றி இப்போது இங்கே வாழச்
சொல்லித்தருகிறேன். எதிர்காலம் நீ இப்போது வாழ்வதிலிருந்து பிறக்க வேண்டும்.
நிகழ்காலம் முழுமையாக இருந்தால் எதிர்காலம் மேலும் முழுமையானதாக இருக்கும்.
முழுமையிலிருந்து மேலும் முழுமை பிறக்கும்.
ஆனால் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டுமென உனக்கு சில கருத்துக்கள்
இருப்பதால் நீ நிகழ்காலத்தில் பகுதியாகத்தான் வாழ்கிறாய். ஏனெனில் உனது முழு
கவனமும் எதிர்காலம்தான். உனது கண்கள் எதிர்காலத்தை பார்க்கின்றன. நீ உண்மையுடன்
நிகழ்காலத்துடன் தொடர்பை இழந்து விட்டாய். நாளை உன்னுடன் தொடர்பில்லாத இந்த
நிஜத்திலிருந்துதான் பிறக்கும். நாளை இன்றிலிருந்து பிறக்கிறது, ஆனால் உனக்கு
இன்றுடன் தொடர்பில்லை.
டெவில் என்ற ஆங்கில வார்த்தை மிகவும் அழகானது – devil – அதை பின்புறத்திலிருந்து நீ படித்தால் அது வாழ்வது என்றாகும். வாழ்ந்தது இறைமையாகும், வாழாதது டெவிலாகும்.
வாழ்ந்தது தெய்வீகமாகும். வாழாதது விஷமாகும். இன்றை நீ தள்ளிப்போட்டால்
வாழாதது உன்னைச் சுற்றி சுமையாக மாறும். நீ அதை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து நீ
விடுபட்டு விடலாம். அது உன்னை வேட்டையாடாது, அது உன்னை இம்சை பண்ணாது.
ஆனால் இன்று வரை மனிதனுக்கு வாழ கற்றுக் கொடுக்கப்பட வில்லை.
நம்பிக்கைதான்  கொடுக்கப்பட்டுள்ளது. வாழும்வகையில் நாளை விஷயங்கள் நிகழ்ந்து விடும், நாளை நீ வாழலாம், வாழ்க்கை நாளை வந்துவிடும், நாளை நீ கௌதம புத்தராகவோ, ஜீஸஸ் ஆகவோ மாறலாம் என்று நம்பிக்கை மட்டுமே தரப்பட்டுள்ளது.
நீ ஒருக்காலும் ஜீஸஸ் அல்லது கௌதமபுத்தர் என ஆகப் போவதில்லை. நீ நீயாகத்தான்
இருக்கப் போகிறாய். நீ யாருடைய நகலாகவும் மாறப்போவதில்லை. மற்றொரு புத்தராகவோ
மற்றொரு ஏசுவாகவோ மாறுவது அசிங்கமானது. அது மனித இனத்துக்கு கேவலம்.
மனிதனுக்கென்று ஒரு மரியாதை உண்டு, ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே
உரித்தான தன்மை உள்ளது.
ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ வேண்டும் என்பது பழைய கருத்து. பழைய முறை
தனித்தன்மை கொண்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குறிப்பிட்ட விதமாக
வாழ்வதற்க்கே ஆனது. அது ஒருவிதமான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.
நான் தனித்தன்மையை போதிக்கிறேன், தனித்துவமான தனித்தன்மையை சொல்கிறேன். உன்னை நேசி, உனக்கு மரியாதை கொடு. ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவன் இதுவரை இருந்தது இல்லை, இருக்கப் போவதுமில்லை. பிரபஞ்சம் ஒருபோதும் மறுபடி செய்வது இல்லை. நீ தனித்துவமானவன். ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானவன். நீ அடுத்தவரைப் போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ காப்பியடிப்பவனாக இருக்க வேண்டிய தேவையில்லை. நீ உன்னைப் போலவே, உனது இருப்பில் இருக்க வேண்டும். நீ உனது விஷயங்களைத்தான் செய்ய வேண்டும்.
நீ உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை மதிக்க ஆரம்பித்தால் நீ முழுமையடைவாய். பின் அங்கே உன்னை பிரிக்க ஏதுமிருக்காது. அங்கே பிளவை உண்டாக்க எதுவுமில்லை.

Tuesday 13 January 2015

பின்லாந்தில்கல்விமுறை...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? படிச்சா செம கடுப்பாகிவிடுவீர்கள்!

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்
போட்டிபோட முடியவில்லை.

‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-
organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது
நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர்.

மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று
ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம்
செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக்
கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம்,
விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

௧. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.

௨. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.

௩. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.

௪. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.

௫. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.

௬. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.

௭. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.

௮. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’
என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.

௯. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில்
பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.

பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56
நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. ‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை.

கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு.,
ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம்
அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!

மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து
ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி
எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில்
ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பி[truncated by WhatsApp]