Wednesday 23 October 2013

இன்சோம்னியா (தூக்கமின்மை)

 
தூக்கம் வரவில்லை என்று பலர் புலம்புவதை நாம் காணலாம். அது என்றாவது ஒரு நாள் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே தினசரி பழக்கமாக மாறினால்? 
 
இன்சோம்னியா (தூக்கமின்மை) என்பது இந்த உலகத்தில் அனைத்து வயதினரும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நல கோளாறாகும். இன்சோம்னியா என்பதற்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால் சாதாரணமானது தான்; தூக்கமின்மை அல்லது சீரான தூக்கம் கிடைக்காததே அதற்கு அர்த்தமாகும். பல வகை இன்சோம்னியாவால் பல மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறுகிய கால இன்சோம்னியா என்றழைக்கப்படும் அக்யூட் இன்சோம்னியா தான் அதிகமானோரை பாதிக்கிறது. போதிய மருந்துகள் உண்டால் அல்லது வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்தால், இது சிறிது காலத்தில் தானாகாவே சரியாகிவிடும். ஆனால் நீண்ட காலமாக இருக்கும் இன்சோம்னியா கண்டிப்பாக வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை கண்டிப்பாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களுக்காவது 30 நாட்களுக்கு மேல் தூக்கமில்லாமல் இருந்தால், குரோனிக் இன்சோம்னியா என்றழைக்கப்படும் இன்சோம்னியாவால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறலாம். குரோனிக் இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவர்களை 'இன்சோம்னியாக்ஸ்' என்று அழைப்பார்கள். இப்போது இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டிருந்தால் ஏற்படும் அறிகுறிகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் பார்ப்போம்.
 
 இன்சோம்னியாவின் அடிப்படை அறிகுறியாக கருதப்படுவது தூக்கமின்மையே. இதனால் பாதிக்கப்பட்ட பல பேர் தூக்கத்தை பெறுவதற்கு சில வழிமுறைகளை தானாக பின்பற்றுவார்கள். அதில் தூக்கத்தை பெறுவதற்கு சிலர் மதுபானம் குடித்து தூக்கத்தை பெறுவதும் உண்டு. சிலருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை என்றால் இன்னும் சிலருக்கோ சீக்கிரத்தில் முழிப்பு தட்டி விடும். இன்னும் சிலருக்கு சீரான முறையில் தூக்கம் வருவதில்லை; பாதி தூக்கத்திலேயே அடிக்கடி விழித்துக் கொள்வார்கள். இதில் நாள் கணக்காக தூக்கம் இல்லாதவர்கள் தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்கள்.

 இரவு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் காலை எழும் போது புத்துணர்வுடன் எழுந்திருக்க முடியாது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. போதுமான தூக்கம் கிடைக்காத போது, உடம்பில் உள்ள ஒட்டு மொத்த மெட்டபாலிச செயல்பாடும் பாதிக்கப்படும். அதனால் காலை எழுந்திருக்கும் போது ஒரு வகை உணர்வு நிலவும், அது லேசான தலை வலி அல்லது ஹேங் ஓவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
 
 பகல் நேரத்தில் அடிக்கடி சோம்பல் ஏற்படுவது இன்சோம்னியாவின் கண்கூடான அறிகுறியாகும். அதிலும் நோய்வாய் பட்டிருக்கும் போது ஏற்படும் சோம்பல் உணர்வை இப்போது உணரலாம். இப்படி பகல் நேரத்தில் ஏற்படும் களைப்பும், தூக்க கலக்கமும் நம் வேலையை வெகுவாக பாதிக்கும்.
மாறும் மனநிலையும் தினசரி போதுமான அளவு தூக்கம் கிடைக்காமல் போகும் போது, நமக்கு எரிச்சல் அதிகரிப்பது இயல்பு தான். அப்படிப்பட்டவர்களுக்கு மூட்டை மூட்டையாக கோபம், சோகம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும். அவர்களால் அனைத்திலும் சரி வர கவனம் செலுத்த முடியாது.
 
 இன்சோம்னியா அறிகுறிகளை காலாகாலத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை பெறாவிட்டால், அவைகள் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு சென்று விடும். நாம் மேல் கூரியதை போல் இல்லாமல் இது மிகவும் ஆபத்தில் போய் முடியும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இதனால் பாதிக்கப்பட்டவர் நிரந்தரமாக மன அழுத்தத்துக்கு ஆளாவார். இது குறுகிய காலப்பிரச்சனையோ அல்லது குறுகிய கால மன அழுத்தமோ கிடையாது. இது முற்றும் போது பாதிக்கப்பட்டவர் முழவதும் செயலிழந்து போவார்.
 
அரோமாதெரபி (வாசனை தெரபி)
 
உங்களுக்கு மன அழுத்தமா? அப்படியானால் அரோமாதெரபியை தேர்ந்தெடுங்கள். இந்த எண்ணெய்கள் நிச்சயம் கை கொடுக்கும்.
சாம்பிராணி சுவாசப்பைக் குழாயழற்சி, இருமல் மற்றும் கவலையினால் ஏற்படும் இன்சோம்னியாவிற்கு இதனை பயன்படுத்தலாம்.

மல்லிகை மன அழுத்தத்தை நீக்க இது பெரிதும் உதவும். சுவாசப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்திற்கு இது பெரிதும் உதவி புரியும்.

 லாவெண்டர் வலி, தலைவலி, சதை பிடிப்பு போன்றவைகளை நீக்கி, நல்ல தூக்கத்தை அளிக்கும். பயத்தினால் போகும் தூக்கத்திற்கும் இது நிவாரணியாக விளங்கும்.

யோகாவின் மேஜிக் யோகா, உடம்பில் உள்ள நரம்பியல் அமைப்பை ஊக்குவிக்கும். மேலும் இன்சோம்னியா வர முக்கிய காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை நீக்கவும் இது உதவும். பிரேதம் போல் படுத்திருக்கும் யோகாவை மேற்கொண்டால், அது பதட்டத்தை நீக்கி தூக்கமின்மையை போக்கும். ஆகவே இதற்கு 20 நிமிட நேரத்தை ஒதுக்குங்கள்.
மூலிகையின் மகிமை உடல் நல ஆரோக்கியம் 'யின்' மற்றும் 'யாங்' என்ற இரண்டு சிறு வார்த்தைகளில் தான் அடங்கியுள்ளது என்று சீன மக்கள் நம்புகின்றனர். இவை இரண்டும் எவ்வளவு சமமாக இருக்கிறதோ, அவ்வளவு அளவு உடல் ஆரோக்கியமாக இருக்கும். சாமந்திப்பூ, சீமைச்சாமந்தி மற்றும் லாவெண்டர் போன்ற மூலிகை தேநீர் பருகினால், அவை இன்சோம்னியாவுக்கு எதிராக போராடி விரைவில் குணமடைய செய்யும்.


Thursday 10 October 2013

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?

         நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் மனமாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் பொருட்டோ, பிள்ளை பிறக்க வேண்டியோ, படிப்பு வரவில்லை என்றோ ஜாதகத்தை தூக்கிக்கொண்டு அல்லாடிக்கொண்டிருக்கிறோம். அப்படி ஜாதகக்கோளாறுகளால் அவதிப்படும் அனைவரும் நவகிரக ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிகழும். தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.
திங்களூர் (சந்திரன்) நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.

ஆலங்குடி (குரு)கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பவேண்டும்.

திருநாகேஸ்வரம் (ராகு) கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.

சூரியனார் கோவில் (சூரியன்) சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

கஞ்சனூர் (சுக்கிரன்) சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

திருவெண்காடு (புதன்) வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.

கீழ்பெரும்பள்ளம் (கேது) திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.

திருநள்ளாறு (சனி) நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.