Wednesday 25 February 2015

OSHO ABOUT FRIENDSHIP

1.நட்புணர்வு
நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.
உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.
பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.
வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் – வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.
நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.
நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
2.கவனித்தல்  [கவனம்]
உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே, ஒரு கவனிப்பவனாக மட்டுமே, ஒரு சாட்சியாக மட்டுமே இரு – தொடர்பற்றவனாக, தொலைவில் இருப்பவனாக, வேறுபட்டவனாக இரு. எண்ணங்களை வெறுமனே பார்! அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே, அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே! ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு! மன ஓட்டம் நிகழட்டும், ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்! அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல், அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், தள்ளி நின்று பார்.
எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்ந்தாலும் கவனி.
உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும் ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி.
ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான், ஒரு சாட்சியாக இரு!
மனதை விட்டுவிடு, கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்.
கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால் நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே.
முழுமையான சாட்சிபாவம் பெற, முழுமையான கவனிப்பவனாக மாற சிறிதுகாலம் பிடிக்கும், பொறுத்திரு.
3.வாழ்க்கை
வாழ்வை பருகுபவனாக, இயற்கையின் சாற்றை பருகுபவனாக, குடிகாரனைப் போல இரு. தூங்குமூஞ்சியாக இருக்காதே, ஒரு தூங்குமுஞ்சி இறந்தவனே! வாழ்வின் ரசத்தை பருகு, அது கவிதை ரசமும் அன்பு மயமும் அளவுகடந்த சாறும் கொண்டது. நீ எந்த வினாடியும் வசந்தத்தை கொண்டு வரமுடியும். வசந்தத்துக்கு ஒரு அழைப்பு விடு! சூரியனும் காற்றும் மழையும் உன்னுள் நுழைய அனுமதி.
வாழ்க்கை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதல்ல, அதிலும் குறிப்பாக மனித இனத்துக்கு அறவே கிடையாது.
நீ எதைச் செய்தாலும் வாழ்க்கை அதுவாகவேதான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.
வாழ்க்கை தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கொண்டதல்ல, ஆடு, பாடு, அனுபவி, ஆனந்தப்படு, கொண்டாடு!
வாழ்க்கைக்கு எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது, அது எப்போதும் எல்லாவற்றையும் கடந்து செல்லும்.
வாழ்க்கை ஒரு நம்பிக்கையல்ல, அது உண்மைக்கான ஆழமான தேடல்.

வாழ்க்கை ஒரு சாகச பயணம், வாழ்க்கை ஒரு தொடர்ந்த தேடல்தான்

மனதை நிறுத்துவதும் இயக்குவதும் ~~ OSHO

1. மனதை நிறுத்துவதும் இயக்குவதும்.
மனம் பல எண்ணங்களாலும் பல வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. நீ எந்த கம்ப்யூட்டரை வேண்டுமானாலும் நிறுத்தலாம், இயங்கச் செய்யலாம். ஆனால் உனது மனத்தை நிறுத்தச் செய்ய உன்னால் முடியாது. அதற்கான பட்டன் இல்லை. கடவுள் இந்த உலகத்தை, மனிதனை, உருவாக்கும்போது மனத்தை நிறுத்துவதற்கான பட்டனை எங்கே வைத்தார் எனற விவரமே இல்லை. அதனால் மனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான சுவிட்சு இல்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓடிக் கொண்டே இருக்கிறது.
இந்த தொணதொணப்புக்கு காரணம் நமது கல்வி முறைதான். அது அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் அது எப்படி மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே சொல்லித் தருகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது நீ தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல் படுகிறது.
நம்மால் அதையும் சொல்லிக் கொடுக்க முடிந்தால்…… அது சாத்தியம்தான். இதைதான் நான் உங்களிடம் வற்புறுத்த விரும்புகிறேன். நாம் அதை தியானம் என அழைக்கிறோம். மனது தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும். அது இரண்டு வழிகளில் உதவும். நீ இதுவரை அறிந்திராத ஒருவிதமான அமைதியை, ஒருவிதமான மௌனத்தை அது உனக்கு கொடுக்கும். உன்னைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உனக்கு கொடுக்கும். எப்போதும் தொணதொணத்துக் கொண்டிருக்கும் மனதினால் அந்த அறிமுகம் கிடைக்காமல் இருக்கிறது. அது உன்னை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவதாக இந்த தியானம் மனதுக்கு ஓய்வை கொடுக்கும். மனதுக்கு ஓய்வை கொடுக்கும்போது அது விஷயங்களை மேலும் அதிக திறமையோடும், அதிக புத்திசாலித்தனத்தோடும் செய்யும் வலிமை பெறும்.
ஆக இரு விதமாகவும் நீ – மனதின் விதமாகவும் இருப்பின் விதமாகவும் – பயன் பெறுவாய். எப்படி மனதின் இயக்கத்தை நிறுத்துவது, எப்படி அதனிடம், போதும். நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதே. நீ ஓய்வெடுத்துக் கொள். என்று கூறுவது எனக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தேவைப்படும்போது மட்டும் மனதை உபயோகப் படுத்து. பின் அது எப்போதும் இளமையாகவும், புதிதாகவும், மிகவும் சக்தியோடும், ,புத்துணர்வோடும் இருக்கும். பின் நீ சொல்வது எதுவும் வற்றிப் போனதாக இராது. அதில் உண்மையும் நேர்மையும் இருக்கும், அது ஆணித்தரமானதாக, ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கும். அதனுள் வாழ்விருக்கும். நீ அதே வார்த்தைகளை உபயோகிக்கலாம், ஆனால் ஓய்வெடுத்ததன் மூலமாக மனம் மிகவும் சக்தி பெற்றிருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு போல மிகவும் வீரியமாக வெளி வரும்.
தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.
முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். –அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.
மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் – அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.
இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன்.  வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.
தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது.
தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும்.
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று.
மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.
மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.
பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும். 
பின் இருப்பு முதலாளியாகும். பின் அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும். 
2.உன்னுடைய மனதின் நிலையை மாற்றுதல்
காதில் போடப்படும் துளைகள் மிக முக்கியமான அங்குபஞ்சர் நிலைகளாகும். அவை நினைவாற்றலோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. காது குத்தப்படும்போது ஏற்படும் சக்தியாற்றல் ஒரு மின்னலைப் போல இருக்கும். உண்மையில் காது குத்துவது சில மனதின் தடுமாற்றங்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சீனாவில் இது ஒன்றுதான் மனது நிலைமாற்றங்களுக்கு சிகிச்சையாகும்.  இந்த துளை போடுவதன் மூலம் தேவையற்ற தடைகளை நீக்கி சக்தி மூளைக்கு நேரடியாக பாய உதவும். இது நினைவாற்றலை அதிகப் படுத்த மிகமுக்கியமான கருவியாகும்.
இது இந்தியாவில் ஒரு சடங்காகும். காது குத்துவதன் மூலம் வாழ்வின் சக்தியில் அடிப்படையான ஒரு மாறுதல் நிகழும். காது குத்துவது என்பது குழந்தைகளுக்கு இன்றியமையாதது. பிறந்த சில நாட்கள் கழித்து காது குத்துவது என்பது சம்பிரதாயமாக உருவாகி உள்ளது. என்று ஓஷோ கூறுகிறார்.
யுக்தி
செய்யும் நேரம்-   நீ மிகவும் டல்லாக, கவலையாக, கோபமாக, சோகமாக இருக்கும்போது.
செய்முறை  -  (உன் காதுகளை குத்திக் கொள்.  சும்மா விளையாட்டுக்கு)
உன் காதுநுனியை பிடித்துக் கொள், அவற்றை கடினமாக அழுத்து. அப்போது உன் மனதின் நிலையில் ஒரு வித்தியாசத்தை காண்பாய்.
3. மூளையை சமன்படுத்துதல்.
எனது தலையின் இடது வலது பாகங்களில் வேறுவேறு விதமான உணர்வுகளை உணர்கிறேன். சமன் படுத்திக்கொள்ள என்ன செய்வது.
செய்யும் காலம் – ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வீதம் 15 நாட்கள்.
முதல் படி – அமைதியாக அமர்ந்துகொண்டு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு உனது கண்களை நீயே அழுத்து. நீ கண்ணை அழுத்தும்போது கண்ணுக்குள் வெளிச்சம் தெரியும். அதுவரை அழுத்து. உனது கண்களை மிகவும் கஷ்டப்படுத்தாதே. சிறிதளவே போதுமானது. அந்த வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இரு. இது பல விஷயங்களை சமன்படுத்தும்.
இரண்டாவது படி – இப்போது 5 நிமிடங்களுக்கு தளர்வாக இரு.
மூன்றாவது படி – திரும்பவும் அழுத்து.
உனது இரண்டு மூளைகளும் தனித்தனியாக செயல்படுகின்றன. ஒவ்வொருவருடைய மூளையும் அப்படித்தான். ஆனால் தியானம் உன்னை ஆழமாக தாக்கும்போது இந்த வேறுபடுதலும், வித்தியாசங்களும் காணாமல் போய் விடும். இந்த பயிற்சி உன்னுடைய மூளையில் பல விஷயங்களை சமன்படுத்தும். நீ மிகவும் அமைதியாகவும் ஒருமுகப்பட்டதாகவும் உணர்வாய்.

Friday 20 February 2015

BE PERFECT......சரியாக செய்தலும் முழுமையாக இருத்தலும்

சரியாக செய்தல் என்ற இந்த மனோபாவமே மக்களை பைத்தியமாக்குகிறது. சரியாக செய்ய
வேண்டும் என்பவன் கிறுக்கனாகத்தான் இருக்க வேண்டும். அவன் சரியாக இல்லாதவரை அவனால் வாழ்வை அனுபவிக்க முடியாது. மேலும் சரியாக இருப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது இயல்பல்ல. முழுமைதான் சாத்தியம், சரியாக இருத்தல் என்பது சாத்தியமல்ல.
சரியாக இருத்தலுக்கும் முழுமையாக இருப்பதற்க்கும் மிகப் பெரிய வேறுபாடு
உள்ளது. சரியாக செய்தல் என்பது எங்கோ எதிர்காலத்தில் வைக்கும் குறிக்கோள். முழுமை
என்பது இப்போது இங்கே உணரப்படும் அனுபவம். முழுமை என்பது வாழ்வின் லட்சியமல்ல. அது வாழ்க்கை வழி. நீ உன் முழு மனதோடு ஒரு செயலில் ஈடுபட்டால் நீ முழுமையாக
இருக்கிறாய். முழுமை மொத்தத்தை, ஆரோக்கியத்தை, ஒழுங்கை கொண்டு வரும்.
சரியாக செய்பவன் முழுமையை முற்றிலுமாக மறந்து விடுவான். அவனுக்கு தான் எப்படி
இருக்க வேண்டுமென்பதில் சில கருத்துக்கள் இருக்கும், அதை அடைய காலம் தேவைப்படும்.
அது உடனடியாக நிகழாது, நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது இந்த பிறவியில், அல்லது மறு பிறவியில் ஆகவே வாழ்வு தள்ளிப்போடப்படுகிறது.
கடந்த காலத்தில் மனிதன் வாழவே இல்லை. அவனது வாழ்வு தள்ளிப்போடுதலாகவே மாறி
விட்டது. நான் எதிர்காலத்தை பற்றிய எந்த கருத்தும் இன்றி இப்போது இங்கே வாழச்
சொல்லித்தருகிறேன். எதிர்காலம் நீ இப்போது வாழ்வதிலிருந்து பிறக்க வேண்டும்.
நிகழ்காலம் முழுமையாக இருந்தால் எதிர்காலம் மேலும் முழுமையானதாக இருக்கும்.
முழுமையிலிருந்து மேலும் முழுமை பிறக்கும்.
ஆனால் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டுமென உனக்கு சில கருத்துக்கள்
இருப்பதால் நீ நிகழ்காலத்தில் பகுதியாகத்தான் வாழ்கிறாய். ஏனெனில் உனது முழு
கவனமும் எதிர்காலம்தான். உனது கண்கள் எதிர்காலத்தை பார்க்கின்றன. நீ உண்மையுடன்
நிகழ்காலத்துடன் தொடர்பை இழந்து விட்டாய். நாளை உன்னுடன் தொடர்பில்லாத இந்த
நிஜத்திலிருந்துதான் பிறக்கும். நாளை இன்றிலிருந்து பிறக்கிறது, ஆனால் உனக்கு
இன்றுடன் தொடர்பில்லை.
டெவில் என்ற ஆங்கில வார்த்தை மிகவும் அழகானது – devil – அதை பின்புறத்திலிருந்து நீ படித்தால் அது வாழ்வது என்றாகும். வாழ்ந்தது இறைமையாகும், வாழாதது டெவிலாகும்.
வாழ்ந்தது தெய்வீகமாகும். வாழாதது விஷமாகும். இன்றை நீ தள்ளிப்போட்டால்
வாழாதது உன்னைச் சுற்றி சுமையாக மாறும். நீ அதை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து நீ
விடுபட்டு விடலாம். அது உன்னை வேட்டையாடாது, அது உன்னை இம்சை பண்ணாது.
ஆனால் இன்று வரை மனிதனுக்கு வாழ கற்றுக் கொடுக்கப்பட வில்லை.
நம்பிக்கைதான்  கொடுக்கப்பட்டுள்ளது. வாழும்வகையில் நாளை விஷயங்கள் நிகழ்ந்து விடும், நாளை நீ வாழலாம், வாழ்க்கை நாளை வந்துவிடும், நாளை நீ கௌதம புத்தராகவோ, ஜீஸஸ் ஆகவோ மாறலாம் என்று நம்பிக்கை மட்டுமே தரப்பட்டுள்ளது.
நீ ஒருக்காலும் ஜீஸஸ் அல்லது கௌதமபுத்தர் என ஆகப் போவதில்லை. நீ நீயாகத்தான்
இருக்கப் போகிறாய். நீ யாருடைய நகலாகவும் மாறப்போவதில்லை. மற்றொரு புத்தராகவோ
மற்றொரு ஏசுவாகவோ மாறுவது அசிங்கமானது. அது மனித இனத்துக்கு கேவலம்.
மனிதனுக்கென்று ஒரு மரியாதை உண்டு, ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே
உரித்தான தன்மை உள்ளது.
ஒரு குறிப்பிட்ட விதமாக வாழ வேண்டும் என்பது பழைய கருத்து. பழைய முறை
தனித்தன்மை கொண்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குறிப்பிட்ட விதமாக
வாழ்வதற்க்கே ஆனது. அது ஒருவிதமான அடிமைத்தனத்தை உருவாக்குகிறது.
நான் தனித்தன்மையை போதிக்கிறேன், தனித்துவமான தனித்தன்மையை சொல்கிறேன். உன்னை நேசி, உனக்கு மரியாதை கொடு. ஏனெனில் உன்னைப் போன்ற ஒருவன் இதுவரை இருந்தது இல்லை, இருக்கப் போவதுமில்லை. பிரபஞ்சம் ஒருபோதும் மறுபடி செய்வது இல்லை. நீ தனித்துவமானவன். ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானவன். நீ அடுத்தவரைப் போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ காப்பியடிப்பவனாக இருக்க வேண்டிய தேவையில்லை. நீ உன்னைப் போலவே, உனது இருப்பில் இருக்க வேண்டும். நீ உனது விஷயங்களைத்தான் செய்ய வேண்டும்.
நீ உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை மதிக்க ஆரம்பித்தால் நீ முழுமையடைவாய். பின் அங்கே உன்னை பிரிக்க ஏதுமிருக்காது. அங்கே பிளவை உண்டாக்க எதுவுமில்லை.