Thursday 12 September 2013

தன்னை அறி



            தன்னை அறிவது என்பதே பேரறிவின் தொடக்கமாகும், தன்னை அறிந்து கொள்ள, அறிந்து கொள்ளும் நோக்கம், முதலில் எழவேண்டும். தன்னறிவு என்பது வெளியில் இருந்து வரக்கூடியது கிடையாது. அதை நாம் தான், கண்டுபிடிக்கும் தேடுதலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். ஏனென்றால் தன்னை மாற்றம் செய்ய முதலில் தன்னை அறிவது அவசியம் என்பதனால், மேலும் தன்னைத் தான் உள்ள வாறு அறிந்து கொள்வதற்கு சொல்வதற்குரிய ஒரு உன்னத மன விழிப்பு கூட தேவைப்படு கின்றது.
தன்னை அறிதல் என்பது, ஒழுக்கத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகின்றது. எந்தவித திரித்தலும் இன்றி, நம்மை நாம் விளங்கிக் கொள்வதுதான், அந்த ஒழுக்கத்தின் தொடக்க மாகும். மேலும் ஒழுக்கம் என்பது, எது உள்ளதோ அதை அப்படியே விளங்கிக் கொண்டு, அதிலிருந்து விடுதலை பெருவதாகும். அதாவது எது உள்ளதோ அதைப்பற்றிய அச்ச உணர்வில் இருந்து விடுதலை பெறுவதாகும்.

வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், இவர்களே இதை முதன்மை படுத்தி சொல்லும் போது தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,

"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"


என்றும்,

"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்
"

என்றும்,

"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே"


எனச் சொல்கிறார் திருமூலர்.

இதையே சிவவாக்கியார்,

"என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே"


என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள். நாமும் எம்மை அறிய முயல்வோமாக.

No comments:

Post a Comment